Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஞாலம் கருதினுங் கைகூடுங்

குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

கருதினுங் (கருதினும்) - எண்ணினாலும், ஆசைப்பட்டாலும், நினைத்தாலும், குறிக்கோள் கொண்டாலும், விழைந்தாலும்,

கைகூடுங்  (கைகூடும்) - நடைவேறும், கிடைக்கும், இலக்கை எட்டுவோம்

காலம் - நேரம், பொழுது, பருவம், சமயம்,  தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்;

கருதி - பார்த்து, எண்ணி, ஆய்வு செய்து

இடத்தாற் (இடத்தான்) - செயல் செய்யும் இடத்திற்கு ஏற்ப / தன்மைக்கு ஏற்ப

செயின் - செய்தால்

முழுப்பொருள்
இவ்வுலகையே ஒருவர் விழைந்தால் அல்லது உலகம் போற்றும் சான்றோன் என்னும் உயரிய இலக்குகளை விழைந்தால் அதனை அவனால் அடைய முடியும். அவனுக்கு கிட்டும்.

ஆனால் அதனை அடைவதற்கு தேவையான செயல்களை நன்கு ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய இடத்தினை ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய சரியான நேரத்தை ஆராய்ந்து இருக்க வேண்டும்.

என்னதான் நாம் நன்றாகச் சிந்தித்துச் சரியான செயல்களைத் தேவையான ஆட்களை வைத்துக் கொண்டு செய்தாலும், அவை முழுமையான வெற்றியடையச் சரியான நேரமும் முறையான இடமும் தேவை.

சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்துச் செய்யும் செயல்கள் இமாலய வெற்றியடைய வாய்ப்பு அதிகம். அதே சமயம், தவறான நேரத்தில் செய்தால் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்.

அப்படி தக்க நேரத்தில் தக்க செயலை தக்க இடத்தில் செய்தால் ஒருவன் விழைந்த இலக்கை அடையலாம். அது இவ்வுலகே ஆனாலும் அடையலாம். 

உதாரணமாக சொன்னால் ”இளமையில் கல்” என்று ஔவையார் கூறியுள்ளார்ர். அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஒரு இளைஞராக இருக்கும் பொழுது நாம் தோற்றாலும் தவறுகள் செய்தாலும் நமக்கு மற்றவர்கள் கற்றுக்கொடுப்பர். அதுமட்டுமின்றி இளைஞராக இருக்கும் பொழுது குடும்பம், பொறுப்பு, போன்ற அழுத்தங்களும் கவனச்சிதறல்களும் இருக்காது. மேலும், ஒரு 35 வயதுக்கு மேல் மேற்படிப்பு படிக்கும் பொழுது நமக்கிருக்கும் உத்வேகமும் அச்சமும் இளைஞராக இருப்பதைவிட குறைவாகவே இருக்கும். ”இளங்கன்று பயமறியாது” என்பது. அதனால் தான் காலம் மிக முக்கியம் என்கிறார் திருவள்ளுவர்.

இன்றைக்கு ஒரு வருடத்தில் உலகெங்கிலும் சராசரியாக ஆறு லட்சம் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இவற்றை நாம் ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்கள் என்கிறோம். அவற்றில் பல நிறுவனங்கள் (கிட்டத்தட்ட 75 சதவிகிதம்!) தோல்வியடைகின்றன. தோல்வியடைந்த இந்த நிறுவனங்கள் தொடங்கிய விஷயம் நன்றாகத்தான் இருக்கும். அவர்கள் துவங்கிய சேவையோ, பொருளோ மிகவும் சிறந்ததாக, உபயோகமாகத்தான் இருக்கும். ஆனால் வெற்றி பெற முடியவில்லை! ஏனென்றால் அவர்கள் சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்கத் தவறியதால்!

நேரம், இடம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நாம் “சூழ்நிலை” என்று குறிப்பிடலாம். ஒரு நிறுவனம் தொடங்க வேண்டுமென்றால் பலவிதச் சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும். “அரசியல் சூழ்நிலை என்ன? பொருளாதாரச் சூழ்நிலை மேலோங்கி இருக்கிறதா? சமுதாயச் சூழ்நிலை எப்படி இருக்கிறது?” இது போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அதற்கேற்ப ஆரம்பித்த நிறுவனங்கள் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.

நாம் வீட்டில் நமது பெற்றோரிடம் ஒரு காரியம் சாதிக்கவேண்டும் என்றால் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம் அல்லவா. ஏனெனில் நேரம் முக்கியம். இது செய்யும் செயலுக்கும் தொழிலுக்கும்  மற்றும் நம் வாழ்வில் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.

எப்படிச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகமோ, செய்ய வேண்டிய நேரத்தில் செய்யவில்லையென்றால் இழப்பும் அதிகம்!

ஒருவர் இளமையில் (ஒரு 23 வயதில்) இருந்து செமித்துக்கொண்டு நன்கு முதலீடு செய்துவந்தால் அவர் 60 வயதில் பெறப்போகும் பயன் மிக மிக அதிகம். ஏனெனில் compound interest அவருக்காக நன்கு வேலை செய்யும். அதுவே ஒருவர் நடுவயதில் (35 வயதில்) சேமிக்க துவங்கினால் அவருக்கு 60 வயதில் பெறப்போகும் பயன் சற்றுக்குறைவாகவே இருக்கும். ஆதலால் எப்போது என்பது மிக முக்கியம்.

முறையாக இளம் வயதிலிருந்து சரியான உணவையும் உடற்பயிற்சியையும் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ”கண்கேட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்” செய்து பயனில்லை. ஒருவருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் வந்த பின்பு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதை விட, இளமையில் இருந்தே நல்ல வாழ்க்கை முறையை பேணுவதும் அவ்வப்போது உடலை கண்காணிப்பதும் (மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்வதும்) ஒருவருக்கு நன்மை பயக்கும். வரும் முன் காப்பது நன்று அல்லவா! பிரச்சனைகளை துவக்கத்திலேயே கண்டறிந்துக் கிள்ளி எறிவதும் மேல்

எப்படி நாம் சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்வது? அனுபவத்தினால்தான்! நம் அனுபவத்திலோ, நம் துறையில் சாதித்தவர்களைப் பார்த்தோ நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் இல்லையா? தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள்! அயராது உழைப்பவர்களுக்குக் காலம் கனியும்! வெற்றி பெற்றவர்கள் பலரைப் பார்த்து நாம் சொல்வதுண்டு, “சரியான நேரத்தில் அந்த இடத்தில் இருந்தார். அதனால் தான் அது சாத்தியமாயிற்று”, “இடம் பார்த்து அடிப்பது, நேரம் பார்த்து அடிப்பது” என்று வழக்கத்தில் நாம் கூறுவோம்.

When: The Scientific Secrets of Perfect Timing by Daniel H. Pink என்ற ஒரு புத்தகம் எந்த நேரத்தில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்.

இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் ; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குரிய வினையை அவன் தகுந்த கால மறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின் .

வினை பெரிதாதலின் இடமும் வேண்டியதாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு .

மு.வ உரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

Thirukkural - Management - Decision Making
In management concepts and practices, there are two types of errors. One is go error and the other is drop error. Go error is carrying out a decision when the time is not right for carrying that out. Drop error is not carrying out a decision when the time is right for carrying that out.

Both executing a task when the time is not favorable and not executing a task when the time is favorable will result in failure. Therefore, the right decision in business is to decide when to execute.

If a person wants to conquer the world, he can do that, if he waits for the right time and the right place, assures Kural 484. Kural 48 1 emphasizes the importance of time for execution of a task. Deciding when to execute alone is not enough. In addition to choosing the right time to do a task, choosing the right place to carry out the task influences the outcome of an action.

The whole world is his who chooses 
The right time and  place.

உழவினார் கைம்மடங்கின் இல்லை

குறள் 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
உழவினார் - உழவு செய்யும் விவசாயிகள்/மக்கள்
கைம்மடங்கின் -  உழவுக்கு ஏர்பிடித்து, நாற்று நட்டு,  களை பறித்து, கதிர் அறுத்தல் முதலிய வேலைகளுக்கு கைகளை மடக்குதல்- உழவு வேலை செய்தல்

இல்லை - இல்லாமல் போனால்
விழைவு - விருப்பம்
உம் - எதிர்மறையும்மை

விழைவதூஉம் - நாம் விருப்ப படாத
விட்டு - ஆகாசம்
விட்டேம் - ஆகாசத்தை பார்த்துக்கொண்டு

என்பார்க்கு - இருக்க வேண்டிய

நிலை - நிலை வந்துவிடும்

முழுப்பொருள்
விவசாயிகள் ஏர்பிடித்து, நாற்று நட்டு, களை பறித்து, கதிர் அறுத்து விவசாய்ம் செய்வர். அப்படி தன்னை வருத்திக்கொண்டு உழவு தொழில் செய்து இவ்வுலகிற்கே உணவு படைப்பார்கள். அப்படிபட்ட உணவையே நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணுகிறோம். நம்மை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? எதுவும் வேண்டாம் என்கிற துறவியார்கள் கூட உணவு உண்டு தான் ஆகவேண்டும்

ஆனால் அவ்விவசாயிகள் உழவு தொழிலை செய்யவில்லையென்றால் நமக்கு உணவு கிடைக்காது. உணவிற்கு வானத்தை பார்த்து தான் நாமும் ஏன் துறவிகள் கூட இருக்க வேண்டும். அந்நிலையை நாம் நினைவில் நிறுத்துக்கொள்ள வேண்டும். இல்லையே உயிர் வாழ்தல் கடினமாகி விடும்.

ஆதாலால் அந்நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது விவசாய நிலங்களை அபகரித்து வீடு கட்டுதல் கூடாது, ஆறுகளை அறுத்து மணல் வாரி தண்ணீர் பஞ்சத்திற்கு வழிவகுக்க கூடாது, நிலத்தடி நீரை ரசாயனம் கலந்து மாசு செய்ய கூடாது, மரங்களை வெட்டி மழை நீரை இல்லாமல் ஆக்க கூடாது.

உழவின் உழவோரின் சிறப்பை சொல்லும் குறள் இது.

மேலும்: அஷோக் உரை (நன்றி) 

எழுத்தாளர் ஜெயமோகன்’இன் ” அழியா இளமைகள்” கட்டுரையில் இருந்து சில வரிகள் 
பூனா நோக்கிச் செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி  ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதைக் கண்டு வசந்தகுமார் ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார். வண்டி நின்றது. நாஞ்சில் நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார். கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அறுவடை இயந்திரம் மாபெரும் வண்டு போல உறுமியது. நாஞ்சில்நாடன் வயலின் புதுதானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி ஊதி வாயிலிட்டு மென்றார். புதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார். அவர் நான் அறிந்த எழுத்தாளன் அல்ல. அந்தச்சட்டையை உருவிப்போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்

நாஞ்சில்நாடன் வேளாண்மையைப்பற்றி சில கேள்விகளைக் கேட்பதற்குள்ளாகவே பெரியவர் பொரிந்துகொட்டித்தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான். ஆனால் வேறுவழியே இல்லை, விவசாயம் செய்தாகவேண்டும். மகன்கள் ஏன் விவசாயம் செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். ஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமலில்லை. ஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்மா விட்டுவிடுவது பாவம்.

இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது. எறும்புகளோ எலிகளோ பறவைகளோ கூட சாப்பிடலாம். விவசாயம் செய்யாமல் விடுவது அவற்றை எல்லாம் பட்டினி போடுவது அல்லவா?” என்றார் பெரியவர். நாஞ்சில்நாடன் கண்கலங்கிவிட்டார். அவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க கேட்டுக்கொண்டே இருந்தார்.
 
Image result for tamil nadu farmers


Image result for tamil nadu farmers 

 

Image result for paddy grains 

Image result for paddy grains 

Image result for tamil nadu farmers

பரிமேலழகர் உரை
உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேன் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தோம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.

விளக்கம்
 (உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய் கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தோம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)


ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உழவினார் கை மடங்கின்- உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின்; விழைவதும் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை- மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண்ணின்பத்தையுந் துறந்தோம் என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற்போம்.

உழவுத் தொழில் நிகழாதாயின் உணவில்லை. உணவில்லையெனின் இல்லறம் துறவறம் ஆகிய ஈரறமும் நிகழா என்பதாம். "யாவரும் விழையுமுணவும் யாந்துறந்தே மென்பார்க்கு அவ்வறத்தின்கணிற்றலுமுளவாகா." என்றுரைப்பர் பரிமேலழகர்.உணவும் யாந்துறந்தே மென்பார்க்கு உணவின்மையால் யாதொரு.கேடுமிராதாதலின், அவ்வுரை தன்முரணா யிருத்தல் காண்க. இனி, "யாதொரு பொருளின் கண்ணும் விரும்புவதனையும் விட்டேம் என்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை." என்னும் மணக்குடவ ருரையும், அங்ஙனமே தன் முரணாயிருத்தலாற் பொருந்தாதாம். 'விழைவதூஉம்' இன்னிசை யளபெடை. எனபார்க்கும் என்னும் எச்சவும்மை தொக்கது. இவ்வைந்து குறளாலும் உழவரது சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை.

எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு.

மு.வ உரை
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தமிழர்களின் அறிவுத் தந்தை வள்ளுவரை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. சேர்ந்தாற் போல் அவரை ஒரு பத்துத் தினங்கள் சந்திக்க இயலாமல் போனது. ஆவலுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் என்னை திரும்பிப் பார்க்கவே சிறிது நேரம் ஆனது.

என்ன நீண்ட நாட்களாக உன்னைக் காணவில்லையே. எங்கே போயிருந்தாய் என்றார்.
அய்யா ஒரு பெரிய துறவியைக் கண்டு வணங்கச் சென்றிருந்தேன் என்றேன்.

மிகப் பெரியவரா என்றார் வள்ளுவப் பெருந்தகை

ஆமாம் என்றேன்

எப்படி என்றார்

நான்மறைகளிலும் தேர்ந்தவர். மிகப் பெரிய ஞானி என்றேன்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே அருகில் இருக்கின்ற கழனியிலே உழுது கொண்டிருந்த ஒரு
உழவரைக் காண்பித்து இவரை விடவா பெரியவர் என்றார். எனக்கோ வியப்பாயிருந்தது.

என்ன சாமி இவர் வேளாண்மைத் தொழிலாளி. அவரோ உலகஞானி. எத்தனை பெரிய பீடத்தின் குரு.எத்தனை சமூகப் பெரியவர்கள் எல்லாம் அவரின் முன்னர் பணிந்து நிற்கின்றனர். குடியரசுத் தலைவர்கள் தலைமை அமைச்சர்கள் விஞ்ஞானிகள் என்று பல தரப்பட்டவரும் அவரைத் தொழுது பணிந்து நிற்கின்றனர். நீங்கள் ஒரு வேளாண் தொழிலாளியைக் காண்பித்து இப்படிக் கேட்பது எப்படி என்றேன்.

மீண்டும் பொது மறைப் பெரியோன் கேட்டார். என் வினாவிற்கான விடையை சொல்
என்றார்.

நான் விடையளிக்க அஞ்சி நின்றேன்.

உலகச் சிந்தனைத் தந்தை வள்ளுவர் நகைத்துக் கொண்டே சொன்னார். இந்த வேளாண் தொழிலாளி ஆமாம் இந்த உழவன் தனது கையை மடக்கித் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள் உயிர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியும் கூட பசித் துன்பத்திற்கு ஆளாகி விடுவார்.
இப்போது சொல் யார் பெரியவர்.எல்லாவற்றையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியா உழவரா யார் பெரியவர் என்றார்.

அவருக்கு விடையளிக்க யாரால் இயலும்

குறள் இதோ

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

துறவறத்தை வள்ளுவர் கேலி செய்யும் பாங்கு விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டு விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்கின்றார்.

குறட் கருத்து 2  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
வள்ளுவரை  அடிக்கடி  நான்  சந்திக்கின்றேன்
            வாய்ப்பதனை  நானே தான்  பெற்றும்  உள்ளேன்
உள்ளு தொறும்  உள்ளுதொறும்  உயர்வளிக்கும்
            உண்மை வழி  அவர்தானே  காட்டி  நின்றார்
கள்ள மனம்  ஒழித்  தவர்தம்  முன்னால்  நின்றால்
            கனி வழியாம்  தனி  வழியைக்  காட்டுவாரே
தெள்ளு  தமிழ்ப்  புலவோர்கள்  அனைவருக்கும்
            தெளிந்த  வழி  காட்டியவர்  அவரே  தானே

உலகத்தில்  முதன்மை இடம்  யாருக்கென்று
            உழன்ற  படி  வள்ளுவரின்  முன்னே நின்றேன்
சில  கற்றுப்  பல  கல்லாச் சிறுவன்  என்னைச்
            சிரித்த படி  வரவேற்றார்  கேள்வி வைத்தேன்
பல  கற்று  உலகத்தை  வென்று  நின்ற
            பண்டிதர்கள்  பலர்   உண்டு படையெடுத்து
உலகத்தை  தன்  குடைக் கீழ்  கொண்டு வந்த
            ஒன்றிரண்டு  மன்னர்  உண்டு  மேலும் நல்ல


சிலை  வடிக்கும்  சிற்பி  உண்டு சிந்தனையால்
            செம்மாந்து  நிற்கின்ற  கவிஞர்  உண்டு
விலையில்லாக்  கலைகள்  உண்டு  நாட்டையாளும்
            வித்தகர்கள்  பல  பேர்கள்  உண்டு  உண்டு
நிலையில்லா  வாழ்விதனை  விட்டு  நீங்க
            நினைக்கின்ற  துறவியரோ  நிறைய  உண்டு
கல  கலவென்றே  சிரித்து  அனைவரையும்
            கையெடுத்து  ஆளுகின்ற  பெண்டிர்  உண்டு

இவர்களிலே  யார்  உயர்ந்தோர்  என்று  ஒரு
            இடக்கு  மடக்கான  கேள்வி  கேட்டு  வைத்தேன்
அவர்  உடனே  வயற் காட்டைக்  காட்டி  நின்றார்
            அங்கொருவர்  உழுது  நின்றார்  என்ன  என்றேன்
தவ  வேட  ஞானியரும்   கூட   இங்கே
            தடம்  மாறிப்  போவார்கள்  உழவன்  மட்டும்
அவன்  கையை  மடக்கித்  தலைக்  கீழே  வைத்து
            அப்படியே  படுத்து  விட்டால் ஒழிந்ததெல்லாம

துறந்து  விட்டோம்  என்பாரோ  துயில்  இழப்பார்
            தொல் புகழின்  புலவோர்கள்  புகழ்  இழப்பார்
இறந்து  பட்டோர்  புகழினிலே  வாழ்வோரெல்லாம்
            இரந்து  நிற்போர்  கூட்டத்தில்  இணைந்து நிற்பார்
பரந்து  பட்டுப்  பாராள்வோர்  பல்லிளிப்பார்
            பாவியராய்  அனைவருமே  மாறி நிற்பார்
உழந்து  நிற்கும்  உழவன்  அவன்  இல்லையென்றால்
            உலகம்  இல்லை  உயிர்கள் இல்லை  ஒன்றும் இல்லை

குறள்
உழவினார்  கைம்மடங்கின்  இல்லை  விழைவதூஉம்
விட்டேம்  என்பார்க்கும்  நிலை

குறட் கருத்து 3  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
எல்லாமும் துறந்து விட்டேன் என்று சொல்லி
இருப்பாரும் தலைவர்களும் அமைச்சர்களும்
நல்லாரும் ஒழுக்கமின்றிப் பொருளைச் சேர்க்கும்
நாகரீக மற்றாரும் வாழ எண்ணி
பொல்லாத செயலெல்லாம் செய்தழியும்
பொறுப்பற்ற அரசியலார் கூட்டமெல்லாம்
செல்லாமல் அழிவார்கள் உழவர் மட்டும்
செய் தொழிலை மறந்தங்கு உறங்கச் சென்றால்
                 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க

குறள் 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
அன்று - அந்நாள்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா.

அன்று அறிவாம் - அந்நாளில் அறிந்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், செய்துக்கொள்ளலாம்

என் -> என்ன -> இகழ்ச்சிக்குறிப்பு, என்று சொல்லுதல் (to say, utter, express)

என்னாது - என்று சொல்லாமல்

அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்)தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம்,

தன்னறம் - ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம்.  

செய்க - செய்ய வேண்டும்

மற்று அது - மற்றவை

பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வை முதலியன குறைதல்.

பொன்றுங்கால் - இறுதிக்காலத்தில்

பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த

துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்

முழுப்பொருள்
ஒருவனுக்கு ஒரு செயலை அவன் சிறப்பாக செய்தால் மனநிறைவை அளிக்குமானால் அதுவே அவனுக்கு அறம். அதை தன்னறம் என்போம். சுவதர்மம்.  அப்படிப்பட்ட தன்னறத்தினை நாளை செய்துக்கொள்ளாம் என்று வேறு வேலை இருக்கிறது என்று தள்ளிப்போடக்கூடாது.

ஏன் என்றால் வாழ்வில் இறுதி காலத்தில் தன்னுடைய உடம்பும் மனதும் தளர்ந்தகாலத்தில் நாம் ஆசைப்பட்டதை செய்ய முடியவில்லையே என்று மன நிறைவு இல்லாமல் துன்பம் அடைய கூடாது. இல்லையேல் வாழ்வு வீணாகிவிடும்.

அப்படி மனநிறைவு அளிக்கும் செயல்களில் இளமையில் இருந்து ஈடுபட்டால் இறுதி காலத்தில் மனநிறைவு இருக்கும். அதுவே இறுதிக் காலத்திற்கு உற்சாகமாய் இருக்கும். துணையாக அமையும்.

அதுமட்டும் இன்றி நாம் இன்று செய்யும் செயல்களே நாளை நம்மை காக்கும். தருமம்(காலத்தேச் செய்யும் கடமைகள் / செயல்கள்) தலைக் காக்கும். இன்று நாம் செயல்களை செய்யாது பிற்காலத்தில் கிருஷ்ணா ராமா என்று புலம்புவதில் பயனில்லை. உதாரணமாக கடைசிக்காலத்தில் பகவத் கீதையும் /திருக்குறளும் படித்து என்னப் பயன்? ஏனேனில் பகவத் கீதையும் திருக்குறளும் நமக்கு கூறும் முதன்மையான செய்தி செயலாற்று. இளம் வயதில் கற்று செயலாற்றாமல் கடைசிகாலத்தில் கற்பதால் ஒரு பயனுமில்லை. ஆதலால் பிற்காலத்திற்கு எதையும் ஒத்திப்போடாதே. இன்றே செய். அது உன்னை நாளை பாதுக்காக்கும். 

பொதுவாக அறம் (கடமை, புண்ணியக்காரியங்கள், மனநிறைவு தரும் சேவைகள், ஒழுக்கம்) சார்ந்த எதையும் தள்ளிப்போடாதே! Do not procrastinate. 

அறம் தனை கடமை என்னும் நோக்கில் பார்த்தால் அதற்கு நான் வாழ்வில் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம் நினைவில் வருகிறது. எனது பக்கத்து வீட்டில் என்னை விட ஒரு வயது சிறிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பள்ளியில் படிக்கும் பொழுது நன்றாக படிப்பார். அவருடைய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் பொழுது கடைசி பரிட்சைக்கு முன்பு தினம் எதிர்ப்பாராத விதமாக திடீர் என்று அவருடைய தந்தையார் மாரடைப்பால் இறந்துவிட்டார். அந்த துக்கமான நேரத்திலும் அவர் மறுநாள் பரீட்சை எழுதினார். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சிப்பெற்றார். அவர் கடைசி நிமிடம் வரை படித்துக்கொண்டு இருக்காமல் வருடம் முழுவதும் உழைத்ததால் அவரை ஒரு இக்கட்டான நிலையில் கூட அவர் முன்பு செய்த கடமை (நேரத்திற்கு அவரது கடமைதனை செய்தது. அதாவது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல் அவ்வப்போது படித்தது) அவரை கைவிடாது காப்பாற்றியது. ஆனால் நம்மில் பலர் கடைசி நிமிடத்தில் படிக்கலாம் என்று பரிட்சை அறை வாசல் வரை கையில் புத்தகம் வைத்துக்கொண்டுப் படிப்பதை பார்த்து இருக்கிறோம். அது தவறு.

என்பதை நினைவில் கொள்க

பி.கு: கண்டிப்பாக கீழ்க்காணும் ஜெயமோகன் உரையை காண்க
பி.கு: இதனை அமேஸான் (Amazon) நிறுவனர் ஜெப் பேஸாஸ்(Jeff Bezos) regret minimization framework என்கிறார். ஆகவே Bias for action என்ற ஒரு தலைமை பண்பை அவரது நிறுவனத்தில் அடிப்படையாக கடைப்பிடிக்கிறார்.

மூலநூல்களை மனப்பாடம் செய்தால்தான் அவற்றை நினைவில் ஓட்டி முழுமையாக அறியமுடியும். ஒரு வரி ஓர் உணர்வுடனோ அனுபவத்துடனோ இணைந்து தன்னிச்சையாக நினைவில் எழுவதுதான் அதை உண்மையில் புரிந்துகொள்ளும் தருணம்

உதாரணமாக ஒருநண்பரின் இறப்புச்செய்தி எனக்கு வந்தபோது பேருந்துப்பயணத்தில் இருந்தேன். அவர் இயற்கைவேளாண்மை, கிராமிய மேம்பாடு சார்ந்து பெரிய கனவுகள் கொண்டிருந்தார். அதைச்சார்ந்தே தன்னை பயிற்றுவித்து வந்தார். அவரது இயல்பே அதைச்சார்ந்து உருவாகி வந்தது

ஆனால் கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு ஊர் திரும்பலாமென நினைத்து தொடர்ந்து வளைகுடா நாட்டிலேயே பணியாற்றினார். அவர் வெறுத்த வேலை. அவர் ஒன்றும் சாதிக்கமுடியாத வேலை.ஆனால் எப்போதும் அவருக்கு செய்து தீர்க்கவேண்டிய ஒரு சிறிய வேலை எஞ்சியிருபப்தாகத் தோன்றிக்கொண்டிருந்தது. ஒரு சிறு மாரடைப்பில் மறைந்தார்.

அவரைப்பற்றி எண்ணியதும் இயல்பாக ஒருகுறள் நினைவில் எழுந்தது

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத்துணை


நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போடாது அறச்செயல்களைச் செய்யுங்கள். இறக்கும்போது அதுவே துணைவரும்– இதுதான் வழக்கமான பொருள். ஆனால் அறம் என்ற சொல்லுக்கு ஏன் தானதர்மங்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்? அப்படி வள்ளுவர் காலத்தில் பொருள் இல்லை.

தன்னறம், தனக்கே உரிய அறம் என ஏன் பொருள் கொள்ளக்கூடாது? ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம். அதைச்செய்யாமல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கவேண்டாம். வாழ்நாள் வீணாகிவிடும். ஒருவன் தன் சொந்த அறம் எதுவோ அதைச் செய்தால் மட்டுமே நிறைவாக இறக்கமுடியும், இறப்பின் கணத்தில் மனநிறைவாக அதுவே உடனிருக்கும். அதையல்லவா வள்ளுவர் சொல்கிறார்?

இப்படி அக்குறள் எனக்கு அன்று திறந்துகொண்டது. மூலநூல்கள் அப்படி திறந்துகொள்ளவேண்டும். அதன்பெயரே தியானம். அதற்கு முதல்படி மனனம்.

எழுத்தாளர் வண்ணதாசனின் ஒரு கவிதை வாசித்த பொழுது இக்குறள் நினைவுக்கு வந்தது
நீங்கள் அந்த முயலை
வேட்டையாடிவிட்டீர்கள்.
இனிமேல் அதனுடைய காட்டைத் தேடுங்கள்.
நீங்கள் பட்டாம் பூச்சியைப்
பிடித்துவிட்டீர்கள்.
இனிமேல் அது அமர்ந்த மலர்களைப் பாருங்கள்.
நீங்கள் சிகரத்தில் ஏறிவிட்டீர்கள்.
இனிமேல் சமவெளி பற்றி யோசியுங்கள்.
நீங்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டீர்கள்.
இனிமேல் தண்டிக்கப்பட்டவனின்
குற்றமற்ற கண்களைச் சந்தியுங்கள்
நீங்கள் பலத்த கரவொலியுடன்
பாடி முடித்துவிட்டீர்கள்.
இனிமேல் உங்களுக்குப் பின்னால் இருக்கும்
அத்தனை வாத்தியக்காரரின்
ஒத்திசைவை நினையுங்கள்.
நீங்கள் இந்தக் கவிதையைப்
படித்துவிட்டீர்கள்.
இனிமேல் இது உங்களை
என்ன செய்யச் சொல்கிறதோ
அதைச் செய்யுங்கள்.
தயவுசெய்து, அதை மட்டும்.
-வண்ணதாசன் (எ) கல்யாண்ஜி

கவிக்கோ அப்துல் ரகுமான் “போட்டி” என்ற ஒரு கவிதை
ஒருநாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது

நான் புன்னகையை எடுத்து வைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது

நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது

நான் வியர்வைத்துளிகளை
எடுத்து வைத்தேன்
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது

நான் கோபத்தை எடுத்து வைத்தேன்
அது வெயிலை எடுத்து வைத்தது

நான் காதலை எடுத்து வைத்தேன்
அது நிலவை எடுத்து வைத்தது

நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்
அது மேகங்களை எடுத்து வைத்தது

நான் எழுத்தை எடுத்து வைத்தேன்
அது மின்னலை எடுத்து வைத்தது

நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து வைத்தது

நான் கவிதையை எடுத்து வைத்தேன்
அது வானவில்லை எடுத்து வைத்தது.

நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்
அது இருளை எடுத்து வைத்தது

நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்
அது கிரகணங்களை எடுத்து வைத்தது

நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது

இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை
எடுத்து வைத்தேன்

வானம் தோற்றது!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

ஒப்புமை
”தெரியின் அறமே துணை” (அறநெறிச் 146)
“முன்புநின் றிசைநி றீஇ முடிவு முற்றிய
பின்புநின் றுறுதியைப் பயக்கும் பேரறம்” (கம்ப.தைலமாட்டு.29)
“அறந்தலை நின்றார்க் கில்லை யழிவெனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது” (கம்ப.இந்திரசித்து வதை 58)


”மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு” (நாலடி 332)
“பின்னை அறிவென்றல் பேதைமை” (அறநெறிச் 105)

“காலைச்செய் வோமென் ற்றத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தானெழுத லரிதான்மற் றென்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு” (அறநெறிச்.66)
“நாளைச் செய்குவம் அறம்எனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை” (சிலப். 28:179-82)
“உம்பர்த முலகி னுய்க்கும் உலகினுக் கிறைமையாக்கும்
வெம்பிய இறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்கும் மெய்யே
நம்பிநல் லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின்” (மேருமந் 968)

மேலும் : அஷோக் (நன்றி)

தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவர் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.


எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு -கிராதம்-44,45,46 கீழ்க்காணும் வரிகள் வருகிறது.  அதில், அசுரன் விருத்தினன் வெல்ல வாய்ப்பிருந்தும் அவனின் வீழ்ச்சி அவன் தள்ளிப்போடுவதால் வருகிறது என்பதை காணலாம். (விருத்தினனின் வீழ்ச்சியையும் இந்திரனின் வெற்றியையும் முழுமையாக வாசிக்க கிராதம் பகுதி 5 மாகேந்திரம் (35 முதல் 46 வரை)) வாசிக்கவும்)

அவன் மீண்டும் படிகளுக்கு வந்தபோது அங்கே இந்திராணி நின்றிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான்.

“என்ன சொல்கிறார்? காமம் நிறையவில்லையா அவருக்கு?” என்றாள். “ஆம், அவர் விழித்தெழ விழையவில்லை” என்றான். “அவர் விழித்தெழவேண்டும்… நான் சொல்லிச்சொல்லி சோர்ந்துவிட்டேன்” என்றாள் இந்திராணி. “கண்ணறிய மாறிக்கொண்டிருக்கிறது காலம். காலத்தில் பிந்தியவன் கணம்தோறும் தன்னை இழந்துகொண்டிருக்கிறான். வேந்தர் எண்ணி வாழும் அவ்வுலகம் இன்றில்லை. விழுந்துகிடக்கும் இனிய சேற்றிலிருந்து ஒருகணம் வெளிவந்து நோக்கும்படி சொல்லுங்கள்.” இந்திராணி அவனை அழைத்துக்கொண்டு விருத்திரனை அணுகினாள். “படைத்தலைவர் சொல்லையும் அமைச்சர் சொல்லையும் ஒற்றர் சொல்லையும் மறந்த அரசன் பகைவர் சொல்லை கேட்பான் என்பார்கள். இனி பொறுக்கமுடியாது. எழுக!” என்றாள்.


. அரண்மனையின் அகத்தளத்தை அடைந்ததும் “என் நகரும் வீழுமா? என் கொடியும் சரியுமா?” என்று தனக்குத்தானே என கேட்டான். “நான் தோற்கலாகுமா?” கௌமாரன் “அரசே, இன்னமும் நம் கோட்டைகளில் ஒன்று எஞ்சியுள்ளது. ஒன்று எஞ்சுவதுவரை நம்பிக்கை நீள்கிறது என்றே பொருள். நம் படைகள் எழும்படி ஆணையிடுக! வென்று பகை முடிப்போம்” என்றான்.

ஆம், நாம் எழவேண்டிய நேரம். ஆனால் என் உள்ளமும் உடலும் களைத்திருக்கின்றன. சற்று மது அருந்தி இளைப்பாறாது இங்கிருந்து என்னால் எழமுடியாது” என்றபின் இருக்கையில் சரிந்து அருகணைந்து நின்ற சேடியரிடம் மதுக்கோப்பைகள் வருவதற்கு கையசைத்தான் விருத்திரன். அவர்கள் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒன்றன்மேல் ஒன்றென அருந்தினான். எரிதீயை நீர்விட்டு அணைப்பதுபோல. விடாய்கொண்டிருப்பது அவனல்ல, அவன் உயிர் என கௌமாரன் நினைத்தான்.


“நீ அஞ்சவேண்டியதில்லை தேவி, என்னை வெல்ல எவராலும் இயலாது” என்றான் விருத்திரன். “எனக்கு எந்தை அளித்த நற்சொல் துணையிருக்கும். இந்திரனின் மின்படை ஒரு மென்மலரென என் தோளில் வந்துவிழுவதை நீ காண்பாய்.”

இந்திராணி அவன் தோளைப்பிடித்து உலுக்கி “பித்தன்போல பேசவேண்டாம். இனி உங்களுக்கு நேரமில்லை. இதோ நகரெங்கும் தேவர்கள் தாக்கப்படும் ஓசை கேட்கிறது” என்றாள். “இன்னொரு கலம் மது. இறுதிக் கலம் எனக்கென எதை வைத்திருக்கிறதென்று ஆவல்கொள்கிறேன். அதன்பின் நான் என் படைக்கலங்களுடன் எழுவேன்” என்றான் விருத்திரன்
===

பரிமேலழகர் உரை
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று. 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.

இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும் அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோடொன்றி நின்று உதவுவதால், பொன்றாத்துணையாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரியரின் அன்பார்ந்த அறிவுரை.

பொருள்: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க‡இறக்கும் ஞான்று செய்வாம் கருதாது (இற்றை ஞான்றே ஒவ்வொருவரும்) நல் வினையைச் செய்க ; பொன்றுங்கால் அது பொன்றா(த) துணை‡ (அவர்) இறக்குங்காலத்தில் அஃது இறவாமல் (அவருயிருடன்) செல்லும் துணையாம்.

அகலம்: ‘பொன்றுங்கால்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான். அன்று என்பதற்கு இறக்கும் ஞான்று என்று பொருள் உரைக்கப்பட்டது. ஞான்று ‡ நாள். அறிதல் என்பது ஈண்டுச் செய்தல் என்னும் பொருட்டு, உரை காண்டல் என்பது உரை செய்தல் என்னும் பொருட்டாதற் போல. ‘மற்று’ அசை. ‘தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற், றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை‡ யாங்குத்தாம், போற்றிப் புனைந்த வுடம்பும் பயமின்றே, கூற்றங்கொண்டோடும் பொழுது.’ ‡ நாலடியார்.

கருத்து: அறமே உயிர்க்கு உற்ற துணையாகலான், அதனை இன்று முதலே செய்க.

மு.வ உரை
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not procrastinate your duty thinking that you will do it tomorrow or some other day. Do your duties on time as you do not know what will happen later. If you consistently do your duties on time, your efforts will protect you like a pillar and you will not regret it.

Questions that I ask to the kid
What will protect you?
How should you do your work? (without procrastinating (and also consistently).
How will do your work on time will protect you ?

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

குறள் 597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]

பொருள்
சிதை - கீழ்மை
சிதைவு - அழிகை, குற்றம்; கேடு; அழிய; தவற 
இடத்து - இடம்; வாய்ப்பு,  இடம் கொடுத்தால்; தருணம்;  கொடுத்தால்
சிதைவிடத்து - (கவனம்) சிதைய,அழிய வாய்ப்பு, இடம்,தருணம் கொடுத்தல்

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்

உரவு - Strength, force, firmness, hardness, வலி
உரவோர் - அறிஞர் (The wise, the learned), மூத்தோர் (Persons of respectability, gravity, age, &c., chief persons)

புதை - சரீரம்

அம்பு - அத்திரம்; மூங்கில்

பட்டு- (அம்பினால்) அடிப்பட்டு

பாடு - நிலைமை, பெருமை, உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; நிலைநிறுத்துதல்; பற்றுதல்; தீண்டுதல்; தாங்குதல்; முடிவுசெய்தல்; அமுக்குதல்; தள்ளுதல்; உறுத்துதல்; குத்துதல்;

ஊன்றும் - சார்பு, இறுகப்பிடி,  தாங்கு, நிலைபெறு

களிறு
- ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள்
 Related image 
முழுப்பொருள்
போர்களத்தில் ஒரு யானைக்கு அம்பினால் உடம்பில்(புதை) அடிப்படும்.  துன்பம் நேரும். அத்தகைய துன்பத்தினால் யானை தளராது. அடிப்பட்டு விட்டோமே என்று களத்தை விட்டு வெளியே வராது. தன் கனத்த கால்களால் ஊன்றி உழைத்து தன்னை நிலைநிறுத்துக்கொள்ளும். தொடர்ந்து அஞ்சாமல் போர்களத்தில் போராடும்.  அதுவே அதனுடைய குணமாகும்.

குறிப்பு: அக்பரின் ஒரு யானை 82 அம்புகளை தாங்கிக் கொண்டது.
[Snippets from Page 218 of War Elephants : According to Akbar's biographer, one of his elephants survived eighty-two arrow strikes and another beast with fifty-five].

அத்தகைய யானை போன்று ஒருவன் தன் வாழ்வில் வரும் துன்பங்களை எதிர்க்கொள்ள வேண்டும். ஒருவன் வாழ்வில் முன்னே செல்லும் பொழுது பல இடர்களும், சோதனைகளும் வரும். நமக்கும் இப்படி வந்துவிட்டதே என்று எண்ணுவோர் கீழோர். அவர்கள் நீலிகண்ணீர் வடித்துக்கொள்வர். தன் கடமையில் இருந்து விலகிவிடுவர். ஆனால் வலியவர்களோ (ஊக்கம் உடைய உள்ளம் உடையவர்களோ) பிர்ச்சனையை கண்டு மனம் தளரமாட்டர்கள். மனம் தளர வாய்ப்பு தரமாட்டார்கள். அதில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்று பார்ப்பார்கள். அஞ்சாமல் முன் நகர்ந்து செல்வார்கள்.  அப்படிப்பட்ட ஊக்கத்துடன் முன்செல்பவர்களே அறிஞர்கள்.  வெற்றியை காண்பர்.

Guitar ப்ரச்சன்னாவுடன் ஒரு நேர்காணல் [நன்றி: NDTV Hindu]
Obviously it is difficult to bring the vocabulary of Carnatic music into the Guitar. But at the same time it was challenging and interesting because I was playing guitar anyways before playing Carnatic music... I don't know if it is difficult or easy .. I don't think about in those terms. I only think about the music. Can I communicate the essence of this music in the instrument? What all do I have to do to make sure it sounds like Carnatic music.


எழுத்தாளர் ஜெயமோகன் உரை (நன்றி)
‘தன் தசையின் அம்பு புதைந்தபோதும் அஞ்சாமல் முன்னால் பாயும் மதயானையைப்போல நெஞ்சுரம் கொண்டவர் வீழ்ச்சியிலும் கூட அஞ்சாமல் முன்செல்வார்’ என்று சொல்லி அதற்கு அடுத்தபடியாகவே முதலில் சொல்லபப்ட்ட குறளை முன்வைக்கிறார் வள்ளுவர்.

ஊக்கத்தின் எல்லையில்லாத வல்லமையைச் சொல்லிவந்த அதிகாரம் இது. மானுடவாழ்க்கை என்பது மன ஊக்கம் என்னும் நீரில் மிதக்கும் மலர் மட்டுமே என்ற மென்மையான உவமைக்குப் பின்னர் உயிர்கொல்லும் தாக்குதலுக்கு ஆளாகியும்கூட கொம்புகுலுக்கி, துதிக்கை சுழற்றி, பிளிறி அம்பு எய்தவனை நோக்கியே பாய்ந்துசெல்லும் யானையின் மூர்க்கத்தையும் வேகத்தையும் உவமையாக ஆக்குகிறார். அந்த உச்சகட்டச் சித்தரிப்புக்குப் பின்னர்தான் இவ்வரி வருகிறது. ஊக்கம் இல்லாதவர்களுக்கு வலியவன் என்னும் நிமிர்வு கிடையாது.

மேலும் அஷோக் உரை (நன்றி) 

பரிமேலழகர் உரை
களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.' (புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல.
இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
களிறு புதை அம்பிற் பட்டுப் பாடு ஊன்றும்-போர்யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும் ; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் -அதுபோல ஊக்க முடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர்.

உவமமும் பொருளுங் கொண்ட அடைகள் இரண்டிற்கும் பொதுவாதலின், ஒல்காமை களிற்றுடனும் பாடூன்றுதல் உரவோருடனுஞ் சென்றியைந்தன. தாம் மேற்கொண்ட வினைக்குத் தடையாகப் பேரிடுக்கண் நேரினும், தளராது தாம் கருதியதை முடிப்பர் என்பது ,உவமத்தாற் பெறப்படும்.முந்தின குறள் ஊழால் தடைப்படும் வினையையும், இக்குறள் இடையூற்றால் தடைப்பட்டு விடா முயற்சியால் வெல்லப் படும் வினையையும் குறித்தன வென வேறுபாடறிக.

மூ.வ உரை
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார். 

சாலமன் பாப்பையா உரை
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

Thirukkural - Management - Motivation
Valluvar, as always known for best use of similes, employs a simile in Kural 597 to highlight further the power of motivation. An elephant, though severely wounded by the arrows shot by opponents in a battlefield, can tolerate the pain, withstand  the onslaughts of the soldiers, and march ahead with determination. Similarly, a highly motivated person will  march ahead courageously and relentlessly to achieve success even if he experiences personal losses.

The strong-willed  are not daunted by failure-
Pierced  with arrows an elephant stands.

இணருழ்த்தும் நாறா மலரனையர்

குறள் 650
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை ]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இணர் - பூங்கொத்து [மெல்லிணர்க்கண்ணி], தொடர்ச்சி, குலை (bunch of fruit), ஒழுங்கு(arrangement), சுவாலை(flame), கிச்சிலிமரம், மாமரம்.

இணர்தல் - To pervade;வியாபித்தல்;
pervade: (especially of a smell) spread through and be perceived in every part of.
pervade: (of an influence, feeling, or quality) be present and apparent throughout.

ஊழ் - நியதி, பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை

ஊழ்த்தும் - குணமுடைய; மலர்ந்தும்

நாறு - மணத்தல், தோன்றுதல், மோத்தல் (to smell), 
நாறா - மணக்காத

மலர் - பூ 

அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons

கற்றது - அறிவு, வித்தை, நூல் ஆகியவற்றை பயின்று

உணர - மற்றவர்களும் (தனக்குமே கூட) உணர படியாக, புரிந்துக்கொள்ளும் படியாக, கற்கும் படியாக
விரித்து -> விரித்துரை - அகலவுரை - விரிவாக எடுத்து

உரையாதார் - உரைக்க தெரியாதவர்கள்

Image result for bouquet 
(நாற்றம் இல்லாத காகித பூங்கொத்து)
முழுப்பொருள்
ஒரு பூ மலர்ந்தால் அதனுடைய நாற்றம் சுற்றி இருக்கும் இடங்களுக்கும் வியாபிக்கும். ஆனால் அப்படி நாற்றம் இல்லாத பூக்களும் உலகில் உண்டு. அவை  பூங்கொத்துக்களாக பூத்தாலும் அல்லது பூங்கொத்தாக நாம் மாற்றினாலும் அவை மணம் தராது. அவை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட மலர்களால் மணம் என்கிற பயன் இல்லை. ஆதலால் நாம் அவற்றை நம் அருகில் வைத்துக்கொள்ள மாட்டோம்.  பெண்கள் அவற்றை பொதுவாக சூடிக்கொள்ள மாட்டார்கள். அவை காகித பூக்கள். வெறும் அலங்கார பூக்கள்.

அதேப்போல் ஒருவன் தான் கற்றவற்றை (பல நூல்கள், வித்தைகள், கல்வி) மற்றவர்களுக்கு தெளிவாக (மனம்) உணரும் படியாக விவரிக்க முடியவில்லை என்றால் அந்த கல்வியால் பயனில்லை. அவர்களை நாம் அருகில் வைத்துக்கொள்ள மாட்டோம். அவர்களின் படிப்பு வெறும் அலங்காரம் மட்டுமே. அத்தகையவர்கள் பெற்ற கல்வி காகித பூக்களை போன்றதாகும்.
 
"நீங்கள் நல்ல வாசகன் எனின் இன்னொருவனை வாசிக்க சொல்லாதீர்கள். வாசித்ததை சொல்லுங்கள் போதும் (வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்)" என்பதே அதற்காக தான்.

மேலும் அசோக் உரை (நன்றி)


பரிமேலழகர் உரை
கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். (செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்.

இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்றது உணர விரித்து உரையாதார் - தாம் கற்று வைத்த நூற்பொருளைப் பிறர் தெளிவாக அறியும் வண்ணம் விளக்கிச் சொல்லும் ஆற்றல் இல்லாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தாக மலர்ந்திருந்தும் மணந்தராத பூவையொப்பர்.

நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் என்பதாம். இணரூழ்த்தல் என்ற உவம அடை பல்துறைக்கல்வி யாகிய பொருளியல்பை யுணர்த்தும். மணமில்லா மலர்க்கு முருக்கம் (முள்முருங்கைப்) பூவை எடுத்துக்காட்டினர் பரிதியார். நாறுதல் என்னும் பொதுப்பொருள் வினைச்சொல், செய்யுள் வழக்கில் நறுநாற்றத்தையும் உலக வழக்கில் தீநாற்றத்தையும் உணர்த்தும். உம்மை எச்சம்.

"எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்துஞ்
சொல்வன்மை யின்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து. (நீதிநெறி. 5)

என்பது சொல்வன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டும்.

மு.வ உரை
தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

எவன் ஒருவனுக்கு தான் கற்றதை சொல்ல தெரிகிறிதோ அவன் கற்றதே படிப்பு. அப்படி இல்லையெனில் அவை காகித பூப்போன்றது - மனம் இல்லாதவை. பின்பு படித்து என்ன பயன்.


Thirukkural - Management - Public Speaking - Lack of Expression
Kural, 650, uses a simile. A simile is a direct comparison. Though educated and well read, if a person cannot pass on to others what he has read is similar to the flower vaudeville. Even if the flower is in full bloom, it is of no use to others because it does not have fragrance. 

The learned lacking expression 
Are flowers without scent. 

Every speaker must have the ability to read a complicated writing and interpret that to help his listeners understand the profound meaning. I call that intelligent communication. Moreover, one of the objectives of education is to read, understand what one reads, and communicate that to others so that they can understand and act. 

English Meaning - As I taught a kid - Rajesh
When you cannot explain/lecture with clarity on the subject you learnt then it is like an artificial flower without any fragrances. It can be used only for decorative purposes without any other use. Whereas if one has learnt the subject properly, he or she would be able to explain/lecture it with clarity to others. That knowledge can be transmitted/transferred from one person to other. 

Questions that I ask to the kid
How you describe with an example about communication with ease/clarity?

அவாவினை ஆற்ற அறுப்பின்

குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
[அறத்துப்பால்,  துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அவா - அது ; ஆசை, அவாவு, இச்சி, விரும்புதல், பற்றுச்செய்தல், ஒன்றைவேண்டிநிற்றல்,  இறங்குதல்

அவாவினை  - ஆசை தனை

ஆற்ற - ஆற்று,  மிகவும், முற்றும், Greatly,exceedingly, entirely
ஆற்றல் - வலிமை, முயற்சி, மிகுதி, ஞானம், நிலையுடைமை(stability),

அறு - அரிதல், ஊடறுத்தல், நீக்குதல், இல்லாமற்செய்தல், வெல்லுதல்,
அறுப்பின் - இல்லாமல் செய்தால், வென்றால்,

தவாநிலை - வழு வாநிலை, a firm condition
தவா வினை - மீண்டும் பிறவாத நிலை அல்லது துன்பம் அல்லாத இன்பம் மட்டும் பயக்கும் நிலை

தான்  வேண்டும்  - தான் வேண்டியது; தான் விரும்பிய

ஆற்றான்  - வலியில்லாதவன்
வரும் - வந்து சேரும்

முழுப்பொருள்
ஒருவன் தன் வாழ்வில் ஆசைகளை, இச்சைகளை, விருப்பங்களை, பற்றுகளை முற்றிலுமாக நீக்கி வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் அவனுக்கு தவ நிலை எனப்படும் மறுபிறவி அல்லாத நிலை வாய்க்கும். இந்நிலை என்பது ஒரு நிலையான நிலை (வழுவாநிலை). இந்நிலை அவன் வேண்டிய அவன் விரும்பிய துன்பம் இல்லாதவனாக அவனை ஆக்கும். அவனை வலிமையாக்கும். அத்தகைய நிலை (ஆசையில்லாமல் இருந்தால்) அவனை வந்து சேரும்.

மேலும்: அஷோக் உரை (நன்றி)


“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.

பரிமேலழகர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதை முற்றுங் கெடுக்க வல்லனாயின்; தவா வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - அவன் கெடாமைக் கேதுவாகிய வினை அவன் விரும்பியவாறே உண்டாகும்.


கெடாமை பிறவித்துன்பங்களால் அழியாமை. அதற்கேதுவாகிய வினை மேற்கூறிய துறவறங்கள். 'வினை' வகுப்பொருமை. விரும்பியவாறாவது துன்பமில்லாதவகை.

மணக்குடவர் உரை
ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அவாவினை ஆற்ற அறுப்பின்-(ஒருவன்) ஆசையை முற்ற ஒழிப்பின், தவா(த)வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - கெடாத வினைகள் தான் விரும்பிய நெறியால் வரும்.

அகலம்: கெடாத வினைகள் - அறங்கள்

கருத்து: அவாவினை விட்டார் அறங்களைப் புரிவர்.

மு.வ உரை
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.