Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்

குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
அவர்வயின்விதும்பல் - பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்லவிரைதல்

காண்க - பார்க்கும்படி செய்தல்.
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு

காண்கமன் - வருங்காலத்தில் காணும் பொழுது

கொண்கனைக் - கொண்கன் - கணவன் -  [கூடிய கொண்கன் குறுக (பு. வெ. பெண்பாற். 12, 11)], ஆவியின் இனிய கொண்கர் (கம்பரா. வரைக்காட்சி) - உயிரினும் இனியரான கணவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஆர - A sign of comparison; ஓர் உவமச்சொல் (தொல். பொ 286, உரை )--adv. [T. āra.] Fully, abundantly; மிக ஆரப்பருக (திவ். திருவாய். 10, 10, 5).

கண்டபின் - கண்ட பிறகு

நீங்கும் -  நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

என் - என்னுடைய
மென்- மெல்லிய
தோட் - தோள்
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்; மயக்கம்; காதலனைப் பிரிந்திருக்கும் காதலி பொலிவு இழந்து நிறம் மாறுபடுவதைப் பசலை என்றும், பசப்பு என்றும் கூறுவர். இது ஒருவகை ஏக்க-நோய். மன ஏக்கம் உடலில் தோன்றுவது பசலை.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து இருக்கும் பொழுது அவள் ஏக்கத்தால் வாடுகிறாள். இந்த ஏக்க நோய் அவளை வாட்டுகிறது. ஆதலால் அவளுடைய மெல்லிய தோள் பொலிவிழந்து நிறம் மாறுகிறது. இதனையே பசலை என்கிறோம்.

தலைவி பிரிவால் வாடும் பொழுது தலைவனை சந்திக்கும் நாளை அன்புடன் எதிர்நோக்குகிறாள். அவள் நினைக்கிறாள் உயிரினும் இனிய என் கணவரை காணும் பொழுது என் கண்கள் அவரை மனமார பார்த்துக்கொள்ள வேண்டும். என் கண் காண்பித்துத் தான் தன் நெஞ்சமே தலைவனை முதலில் பார்த்தது. கண் பார்த்தால் நெஞ்சமே பார்த்தது போலும் ஆகும். (குறள் - 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று என்பதை நினைவில் கொள்க). ஆதலால் இத்தனை நாள் பார்க்காததற்கும் சேர்த்து வைத்து பார்க்க வேண்டும். என் கண்கள் மூலம் என் உடம்பு பசியை (வேட்கையை) தீர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பசி ஆர பார்த்து தீர்த்தால் தான் அவள் மேல் படர்ந்து உள்ள ஏக்க நோயின் விளைவான பசலை நிறம் அவள் மெல்லிய தோளகளில் இருந்து நீங்கும். ஏனெனில் நெஞ்சத்தில் (இதயத்தில்) இருந்தே இரத்தம் உடம்பில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லும்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும். ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் வரவு கூறி, ஆற்றாயாய்ப் பசக்கற் பாலை யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.)

கண் ஆரக் கொண்கனைக் காண்க- என் கண்கள் நிறைவு பெறும் வகை என் காதலரை நான் காண்பேனாக; கண்ட பின் என் மேல் தோள் பசப்பு நீங்கும்- அங்ஙனங் கண்ட பின் என் மெல்லிய தோளின்கண் உள்ள பசலை தானே நீங்கி விடும்.

நிறைவுபெறும் வகை காணுதலாவது ஆசை தீரக் காண்டல். காண்க என்னும் வியங்கோள் ஆர்வமிகுதி பற்றியது. 'மன்' அது, இன்றியமையாததென்னும் பொருள்பட நின்றமையின் ஒழியிசை. காதலர் வரவைக் கண்ணாற் கண்டாலன்றிக் காதாற் கேட்டதினால் மட்டும் பசலை நீங்கா தென்பதாம்.

மணக்குடவர் உரை
என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.

மு.வரதராசனார் உரை
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

No comments:

Post a Comment