Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_005. Show all posts
Showing posts with label Athikaaram_005. Show all posts

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

குறள் 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

எனப்பட்டதே - என்றென படுவதே 

இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

அஃதும் - அதுவும் 

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

பழிப்பது  - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

ஆயின் - ஆனால்; ஆராயின், ஆதல், ஆகுதல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

முழுப்பொருள்
அறத்தொடு இயைந்த இல்வாழ்க்கை சிறந்ததாகும். இல்லறத்தில் இருப்போர்  பொறுமையுடன் கடினமாக உழைத்து இல்லறத்தின் அறங்களை நிறைவுசெய்கின்றனர். அவர்கள் துறவறத்தில் பெரும் பயனை பெறுவர் என்று முன்னரும் பார்த்தோம். அப்படி இல்லறத்தில் இருந்தும் பிறரின் பழிகளை பெறாமல் வாழ்ந்தால் அதைவிட சிறந்தது ஏதுமில்லை. 

துறவறத்தில் இருப்போர் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வர். ஆனால் இல்லறத்தில் இருப்போர் ஐம்புலன்களையும் அடக்கி ஆளமாட்டார்கள். இருப்பினும் தன் இல்லற அறங்களை செய்து பிறரின் பழி வராது வாழ்வானாயின் அவன் துறவறத்தில் பெறக்கூடிய இடத்தினை இல்லறத்தின் மூலமாகவே பெறுவான். 

ஒப்புமை
”மனைவாழ்க்கை முன்னினிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தானினிது நன்கு” (இனியவை 3)

”இல்லற மல்லது நல்லற மன்று” (கொன்றைவேந்தன்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

குறள் 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஒழுக்கி - ஒழுக்குதல் - ஒழுகச்செய்தல்; நடப்பித்தல், வார்த்தல்; நீளஇழுத்தல்; 
ஒழுக்கு - ஒழுகுகை; நீர்முதலியனஓடுகை, நீரோட்டம்; வரிசை; நடைமுறை; நன்னடை, ஆசாரம்.துளித்தல்.

அறன் - அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு
இழுக்காறு - தீநெறி, தீயொழுக்கம்
இழுக்குதல் - தவறுதல்; வழுக்குதல் இழத்தல் தளர்தல் துன்புறுதல் தள்ளிவிடல்; மறத்தல் பின்வாங்கல்.

இழுக்கா - பிழையாத ; தவறாத 

இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

நோற்பாரின் - நோற்பார் - தவம்செய்பவர்

நோன்மை - பொறுமை; வலிமை; பெருந்தன்மை; தவம்.

உடைத்து - இருக்கும், உண்டு 

முழுப்பொருள்
இல்லறத்தில் இருப்போர் தனது அறங்களை பிழையாது செய்யவேண்டும். அப்படி தவறாது அறங்களை செய்வது மட்டுமின்றி பிறரையும் (மற்ற இல்லறத்தில் இருப்போரையும், துறவறத்தில் இருப்போரையும்) அவரவர் வழியில் அவரவர் அறங்களை ஒழுகி வாழ அனுமதித்து அவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருப்பானாயின் அவன் துறவறத்தில் தவம்செய்கிறவர்கள் பெறக்கூடிய பொறுமையும் வலிமையும் பயனையும் இல்லறத்திலேயே பெறுவான். 

துறவறத்தில் இருப்போர் இல்லறத்தில் இருப்போரை பற்றி கவலை பட மாட்டார்கள். ஆனால் இல்லறத்தில் இருப்போர் துறவறத்தில் இருப்போரையும் போற்றி பாதுக்காக்க வேண்டும். ஆதலால் தான் இல்லறத்தில் இருப்பவர்கள் துறவறத்தில் இருப்பவர்களை அவரவர் அறங்களை பேண அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். துறவறத்திக்கு சென்றவர்களை மறுபடியும் இல்லறத்திற்கு பிடித்து இழுக்கக்கூடாது.

ஒப்புமை
”அறநெறி பிழையா தாற்றின் ஒழுகி” (மதுரைக் 500)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.).

மணக்குடவர் உரை
பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

மு.வரதராசனார் உரை
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

Thirukkural - Management - Married Life
In addition to possessing love and virtuous practices, a husband has to lead a righteous life. For a successful married life, it is not enough if a husband leads a virtuous life, but he also has to help others lead a virtuous life. When a husband leads a righteous life himself and he helps others lead righteous life that, both leading and helping others, is better or greater than doing penance, according to Valluvar in Kural 48.

His is the greater penance who helps penance
Not erring in his worldly life.

Not going astray or committing any wrong act in his own life and not allowing the people under his care to go astray or commit wrong acts are truly too challenging for a human being. But that sort of challenge has its own rewards for a married person. 

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

குறள் 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
அறத்து - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

புறம்பு - puṟampu   n. புறம்¹. [K. hoṟagu.]1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில்வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய. 7). 2.That which is separate, detached, distinct or exclusive; தனியானது. (W.) 3. Other; மற்றை. (W.)4. Back of a person; முதுகு. தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51).

புறத்த - இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை

புறத்து - மற்ற ; பிற 

ஆற்றில் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

போஒய்ப் - சென்று 

பெறுவது - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

எவன்? - யார் ?

முழுப்பொருள்
ஒருவன் இல்லறத்தில் இல்லறத்தின் அறநெறிகள் படி வாழ்வானானால் அவன் அதற்கு பயனாக பெறுபவற்றிலும் சிறந்த எதனை வேறு வழியில் சென்று பெறப்போகிறான் ?

இல்லறத்திலேயே நாம் எல்லா நற்பயனையும் அடைய முடியும். ஆனால் அதற்கான அறத்தை நீண்ட காலம் ஆற்ற வேண்டும் பொறுமையாக. அக்கடமைகளை ஆற்றுவது கடினமாக இருப்பினும் பயன் கண்டிப்பாய் கிட்டும். அது சிறந்தாதாகவே இருக்கும். 

ஒருவன் இல்லறத்திலேயே துறவறத்திற்கான பயனை அடையமுடியும். ஆனால் இல்லறத்தை விட துறவறம் மேல் என்றோ துறவறத்தை விட இல்லறம் மேல் என்றோ திருவள்ளுவர் எங்கும் கூறவில்லை. 

உலகில் வாழ்வு தொடர, இல்லறத்தோர் இருத்தல் வேண்டும். ஆனால் நல்ல இல்லறத்தை விட்டு, அதற்கு உண்டான கடமைகளைப் புறக்கணித்து துறவு கொள்ளுதல், ஒருவருக்கு கடமையை மறந்த செயலாகும். அது இருவகையில் குற்றமாகும். தனக்கென்று இருக்கும் தற்போதைய கடமையை புறக்கணித்தல், துறவின் அடிப்படைத் தகுதிகளை புரியாதிருத்தல். இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்கின்ற மனநிலை துறவறதிற்கு ஏற்றதில்லை. அத்தகு துறவினால் எவருக்கும் பயனில்லை. அது துறவும் இல்லை! 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அறந்தலைப் பிரியாதொழுகலும்” (அகநா 173:1)


பரிமேலழகர் உரை
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.).

மணக்குடவர் உரை
இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.

சாலமன் பாப்பையா உரை
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

குறள் 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

அஞ்சிப் - அஞ்சுதல் - பயப்படுதல்

பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி.

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

உடைத்து - உடை-தல்
uṭai-   4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burst into fragments; தகர்தல் என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல் உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossom as a flower; மலர்தல் கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ 12, பெண் 3). 7. To be discomfited, routed, broken, as the ranks of an army; தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18). 8. To be dispirited, dejected,as one's heart with grief; to be in despair;மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10). 9. To become poor, reduced in circumstances; எளிமைப்படுதல். (பிங்.) 10. To be divulged, to become publicly known; வெளிப்படுதல் 11.To die; சாதல் உடைந்துழிக்காகம்போல் (நாலடி,284).

ஆயின் - ஆனால்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

எஞ்சல் - eñcal   n. எஞ்சு-. 1. Defect,blemish; குறைவு எஞ்சலி லமரர் குலமுதல் (திவ்.கிபுவாய். 3, 6, 9). 2. Extinction; அற்றொழிகை.வழியெஞ்ச லெஞ்ஞான்று மில் (குறள், 44).

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
இல்லறத்தில் சிறக்க 11 கடமைகளை (அதிகாரத்தில் முதல் மூன்று குறள்கள். குறிப்பு: 11வது கடமை தன்னை பேணிக்கொள்வது. ஏனெனில் பிறரைப் பேணிக்கொள்ள தான் இயங்க வேண்டுமே!) ஒருவன் செய்யவேண்டும். அதுவே அவனுடைய அறம். ஆனால் ஒருவன் இல்லறத்தை நடத்த பொருள் ஈட்டவேண்டும். ஆனால் தேடினால் மட்டும் போதாது, அதனை பழி அஞ்சித் தேடவேண்டும்.

பழி என்பது உலகம் தூற்ற செய்வது. பாவம் என்பது நமது ஆத்மாவில் பதிவது. பாவம் செய்து ஆத்மாவை இழிவுபடுத்தக்கூடாது.

அப்படி பழிக்கு அஞ்சி ஈன்ற பொருளை பகுத்துண்ண வேண்டும் (1) தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர்கள், 2) தெய்வங்கள், 3) விருந்தினர்கள், 4) உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள் 5) தான் -> குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.)

அப்படி ஒருவர் எல்லோருடனும் பகுத்துண்டால் அவருக்கும் அவரது தலைமுறைக்கும் (பரம்பரை, சந்ததிகளும்) ஒரு நாளும் அழிவில்லை.

நீ நியாயமாக ஈன்ற பொருளில் பிறருக்கு உதவினால் ஒருநாளும் அழிவில்லை. ஆனால் பிறரிடம் ஏமாற்றி ஊழல் செய்து பாவத்தால்  ஈன்ற பொருளில் உதவினால் அது செய்தவனுக்கு பயன் தராது, அப்பொருளின் சொந்தக்காரரருக்கு பயன் போய் சேரும்.

ஒப்புமை
”பாத்துண்மின்” (நாலடி 92)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.).

மணக்குடவர் உரை
இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

மு.வரதராசனார் உரை
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
தென்புலத்தார் - தென்திசையிலுள்ளபிதிரர்; யமபடர்.

தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

ஒக்கல் - உறவினர், சுற்றத்தார்; குடி, குடும்பம்; மூட்டுகை; இடைப்பக்கம்; ஒக்கலை

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

ஐம்புலம் - ஐந்துபொறிகளுக்குரியஉணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

ஐம்புலத்து - ஐம்புலத்தவர் - தென்புலத்தாராம்பிதிரர், தெய்வம், விருந்து, சுற்றத்தவர், தான்.

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு

முழுப்பொருள்
1) தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர்கள், 2) தெய்வங்கள், 3) விருந்தினர்கள், 4) உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள் 5) தான் என்னும் தன்னை ஆகிய ஐவரையும் பேணி வளர்த்து உபசரித்து சீர்தூக்கிப் போற்றி வாழ்வதே சிறப்பாகும். அதுவே இல்வாழ்க்கையின் அறமாகும் (கடமையாகும்).

ஒருவன் தன்னை அறவழிகளில் நிறுத்திக்கொள்ளாவிடில், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அறவழிக் கடமைகளை ஆற்றமுடியாது என்பதால், “தான்” என்று இல்லத்தோரையும் சேர்த்து சொல்லப்பட்டது.

தன்னை மட்டும் பேணிக்கொள்ளாமல் தன்னை சார்ந்துள்ள அனைவரையும்  தெய்வங்களையும் மூதாதையர்களையும் பேணி கடமையை ஆற்றுவதால் தான் இல்வாழ்க்கை இல்லறம் என்னும் அறமாக மாறும்.

சிலப்பதிகாரம் 14:11, உரை,  இவ்வாறு கூறுகிறது ‘இல்லறமென்பது கற்புடைய மனைவியோடு, இல்லின் கண் இருந்து செய்யும் அறம். அதன் துறையாவன: தன்னை ஒழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலம் காத்தல் முதலியனவும், அருளும் அன்பும் உடையன ஆதலும், பிறவும்’

மேலும்: அஷோக் உரை

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்துள்ள கண்ணகி, அவன் (அவள் தலைவன் கோவலன்) இல்லாமல் தன்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறாள். அப்பாடல் கீழே
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
-- இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ( / 2. மதுரைக் காண்டம் / 6. கொலைக்களக் காதை)

பொருள்
அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.  

இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 

அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 


ஒப்புமை
”அரசுகொள் கடன்க ளாற்றி மிகுதிகொண்ட டறங்கள் பேணிப்
பரவரும் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள்ள பதிகள் எங்கும்” (பெரிய. திருநாட் 26)

பரிமேலழகர் உரை
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.).

மணக்குடவர் உரை
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

மு.வரதராசனார் உரை
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமனன்)
ஒழுக்கத்துக்கு முதன்மை
ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே வருணன் எனப்படும் தெய்வத்தின் கடமை என்பதையும், தெய்வங்களுக்கு வருணன் வழங்கப்பட்ட முதன்மையையும் வேதம் கூறுவதாக அறிவோம்.  இதிலிருந்தே, வேதங்களிலே ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதென்பதும் புலனாகும். வேதங்கள் மனிதனுடைய கடமைகளை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம், ஞானிகள், பிதிரர், உடன் வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்குமட்டுமின்றிப் பிராணிகளுக்கும் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொரு மனிதனும் கடமைப்பட்டுள்ளான் என்பது வேதவாக்கு. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்க ஐம்புலத்தா றோம்பல்தலை” என் வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பிடத்தக்கது. பிதிர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் ஆகிய ஐவருக்கும் செய்ய வேண்டிய கடமையைக் செய்வது ஒருவனுக்கு அறம் என்பதே இக்குறளின் கருத்து. வேதங்களும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றன. குறளும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. வேதமும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. அவற்றுள் தென்புளத்தார் தெய்வம் விருந்து ஆகிய மூவரையும் பேண வேணுமென்பது இரண்டுக்கும் பொதுவாயுள்ளது. ஆனால், குறள் ஒருவன் தன்னையும் தன் உறவினரையும் பேணவேணுமெனக் கூரியதற்கும் பதிலாக, வேதங்கள் ஞானிகளையும், மக்கலாலாத ஏனைய பிராணிகளையும் பேணுவது ஒருவனுக்கு அறம் எனக் கூறியிருப்பது ஒப்பிடத்தக்கது. ஒருவன் தன்னைப் பேணுவதை ஓர் அறமாக வேதங்கள் கருதாதது இங்குச் சிந்திக்கத்தக்கது. தன்னைப் பேணுவது பிறரைப் பேணுவதற்குத் தான் நிலைக்களனாய் நின்று பயன்படும் பொருட்டே. எனவே, தன்னைப் பேணுவதும் ஒரு அறமாகுமென வாதாடலாம். எனினும், சுயநலமின்மையே எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாக வேதங்கள் பேசுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். சதபத பிராமணத்தில் ஒருவன் தனக்குரிய எல்லாவற்றையும் தியாகம் செய்தலே வீடுபேற்றுக்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. சுயநலமின்மை, தியாகம் ஆகிய இவற்றோடு சேர்த்து அன்பையும் விருந்தோம்பலையும் மிக முக்கியமான அறங்களாக வேதங்கள் பேசுகின்றன. சூதாடல், பிறன்மனை விழைதல், பொய் பேசுதல் ஆகியவற்றைப் பெரும்பாவங்களாக வேதங்கள் கண்டிக்கின்றன. 

எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையில் இருந்து (ஒக்கலை ஏறிய உலகளந்தோன்)
ஒக்க என்றால் இணையாக என்று பொருள். இணைந்து என்றும் வரும்.ஒக்கடித்தல் என்றால் சேர்ந்து தாளமிடுதல் என்று வையாபுரிப்பிள்ளையின் அகராதி சொல்கிறது. ஒக்க நோக்குதல் என்றால் சமமாக பாவித்தல். ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ என்று தேவாரம்.

ஒக்கல் என்றால் சுற்றத்தார் ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ என்று வள்ளுவர். மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர், தான் என்று ஐந்து பேரையும் பேணுவது கடமை. ஒக்கலித்தல் என்றால் பேணுதல் என்ற பொருள் இதிலிருந்து வந்திருக்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகனின் “தத்துவம் மேற்கும் கிழக்கும்” எனும் கட்டுரையில் இருந்து
இந்திய தத்துவநூல்கள் பெரும்பாலும் சூத்திரங்கள் என்னும் ஒற்றை வரிகளாக இருப்பதைக் காணலாம். அவை இருபட்டை அணுகுமுறை வழியாக அறியப்பட வேண்டியவை. அவற்றைத் தர்க்கபூர்வமாக விளக்கி விரித்து எழுதும் உரைகள் வழியாக அறியும் முறை ஒருபட்டை. அவை தத்துவத்துக்குள் வருகின்றன. அவற்றை தியான மந்திரங்களாக ஆக்கி தியானித்து உபாசித்து அறியும் முறை இன்னொரு பட்டை. அது தத்துவமே அல்ல

உதாரணமாக திருக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்ற குறள் இந்திய தத்துவநூல்களுக்குரிய சூத்திர வடிவில் ஒரு தொன்மையான தரிசனத்தை முன்வைக்கிறது. தென்புலத்தார் என்றால் மூதாதையர். மூதாதையர், தெய்வம், விருந்து ,ஒக்கல் அதாவது சொந்தபந்தங்கள், தான் என ஐந்தையும் பேணவேண்டியது ஒருவனின் கடமை என்கிறது இக்குறள்

உரைகளின் வழியே விதவிதமாக இந்த ஒன்றரை வரி விரியும். தெய்வத்திற்கும் முதலாக தென்புலத்தாரை ஏன் வைத்தார் வள்ளுவர்? ஏனென்றால் அவர்கள்தான் ஆதிதெய்வங்கள். வழிபாட்டின் தொடக்கமே மூதாதையர் வழிபாடுதான். தெய்வம் என பன்மையில் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கலாம்.

விருந்து என்ற சொல் விருந்தினரை அல்ல சான்றோரையே குறிக்கிறது என விளக்கங்கள் உண்டு. ஒக்கல் என்பது உறவினரை மட்டும் சொல்லவில்லை. அச்சொல் சார்ந்திருப்பவர்களைச் சொல்கிறது. பழைய இல்லறவாழ்க்கையில் பல்வேறு சிறுகைத்தொழிலளர்கள் மற்றும் நாடோடிகள் இல்லறத்தானைச் சார்ந்திருந்தனர். வீட்டு மிருகங்களையும் இதில் சேர்க்கலாமென விளக்கப்படுவதுண்டு

சிந்திக்கும்தோறும் இந்த வரி விரிந்தபடியே போகும். இப்படி சுருக்கமாக, சூத்திரவடிவில் எழுதும் வழக்கம் மேலைச்சிந்தனை மரபில் பிற்காலத்தில்தான் தத்துவ அங்கீகாரம் பெற்றது. நீட்சேயின் ‘இவ்வாறு பேசினான் ஜரதுஷ்டிரன்’ என்ற நூல் முக்கியமான முன்னுதாரணம். பின்னர் விட்ஜென்ஸ்டீனின் நூல்கள்.

இந்த வரியை ஒரு தியானமந்திரமாக கொள்ளும்போது அதையொட்டி ‘சிந்திக்கும்’ பயிற்சியை நாம் திட்டமிட்டு ரத்துசெய்கிறோம். அதைவெறும் சொல்லாட்சிகளாக மட்டுமே எடுத்துக்கொண்டு அச்சொற்கள் நம் அகத்தை ஊடுருவி கனவுத்தளத்தை ஆழத்து அமைதியையும் தீண்ட அனுமதிக்கிறோம்.

எனக்குத்தெரிந்த ஒரு துறவி இவ்வரியை அவரது குருவிடமிருந்து மந்திர உபதேசமாகப்பெற்றார். நாளடைவில் ‘தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்’ என்ற ஒற்றைவரியாக அது மாறியது. அவர் அதைச் சொல்லும்போது நான் மனம் அதிர்ந்தேன். தென்புலத்தவரே தெய்வமும் விருந்தும் சொந்தமும் ஆகிறார்கள் என்றும் தென்புலத்தாரின் தெய்வம் விருந்தும் சொந்தமும் தான் என்றும், தென்புலத்தார் விருந்தும் தெய்வமும்போன்றவர்கள் என்றும் விதவிதமாக அர்த்தம்கொடுக்க ஆரம்பித்தது அவ்வரி.


சங்கர நாராயணன் என்பவர் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் (குரு: கடிதங்கள்) இவ்வாறு குறிப்பிடுகிறார்
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்று வள்ளுவர் சொல்கிறார். தென்புலத்தார் என்றால் பெற்றோரும் மூதாதையரும். தெய்வம் அதன் பின். விருந்து, சுற்றம், தான் என ஐது தரப்பையும் பேண வேண்டும். சரி, மாதாபிதாகுருதெய்வம் என்னும் கணக்கில் குரு வரவேண்டுமே எங்கே? என்று கேட்டேன். ஒரு நல்ல மாணவர் உடனே பதில் சொன்னார். குருவை நம் ஓம்பவேண்டியதில்லை, குருதான் நம்மை ஓம்புகிறார் என்றார்.

உங்கள் குறிப்பு மிகமிகச் சிறப்பானது. ஏன் குரு உறவு முக்கியமானது? அம்மா நம் உடலை நினைக்கிறாள். அப்பா நம் மரபை நினைக்கிறார். தெய்வம் நம் ஆத்மாவை நினைக்கிறது. நம் ஞானத்தை நினைப்பவர் குரு மட்டும்தான்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்

குறள் 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
துறந்தார்க்கும் - துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்

துவ்வு - உணவு; அனுபவம்; ஐம்பொறிநுகர்ச்சி; இழிவு.

துவ்வாதவன் - ஐம்புல நுகர்ச்சியை நாடாதவன்
துவ்வாதவர்க்கும் துவ்வாதவர் - tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன். துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் (குறள், 42).

இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறந்தார்க்கும் - வாழ்வை கடந்தவன்; மரணம் அடைந்தவன்

இல்வாழ்வான் இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை

என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன்.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் வாழ்பவன் தான் உண்டு தன் வேலையுண்டு, தன் குடும்பம் உண்டு தன் மனைவியுண்டு தன் பிள்ளைகள் உண்டு என்று குறுகிய வட்டதில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பது தான் இக்குறள் சொல்லாமல் சொல்கின்ற பொருள்.

இல்வாழ்க்கை என்பது சுயநலத்தினாலான எளிய வாழ்க்கை முறை இல்லை என்பது இங்கு உறுதியாகிறது. இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் இச்சமுதாயத்திற்காற்றவேண்டிய கடமைகளை இங்கு கூறுகிறது. அதாவது இல்வாழ்க்கையில் வாழ்பவர் என்பவர் எல்லாம் துறந்த துறவிகளுக்கும், வறுமையில் இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுகும் தன் கடனை செலுத்தியாக வேண்டும். துறவிகளுக்கும் வறுமையில் இருப்பவர்களுக்கும் தங்க இடம், உண்ண உடை, உடுக்க ஆடை ஆகியவற்றை வழங்கி உதவ வேண்டும். துறவிகளுக்கும் வறுமையில் இருப்பவர்களுக்கும் துணையாக இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் திகழவேண்டும். அவ்வாறு செய்வது ஒரு அறச்செயல்.

இறந்தார்  என்றால் மூதாதையர். இன்று நாம் ஒரு நல்ல நிலைமையில் இருந்தால் அது ஒரு சில வருடங்களில் அடைந்த வளர்ச்சியல்ல. நமது மூதாதையர் சந்ததி சந்ததியாக உழைத்து பலவற்றை துறந்தும் இழந்தும் நாம் பிறக்கும் பொழுது ஒரளவேணும் நல்ல நிலையில் நம்மை பிறக்க வைத்திருப்பர். அப்படி இருந்த ஒரு தளத்திலேயே ஒருவர் அவரது வாழ்க்கையை கட்டமைக்கின்றனர். அப்படி இறந்தவரை மனதார நினைத்து அவர்களுக்கு நீர்கடனளிப்பது ஒருவருடைய கடமை. அது ஒருவிதத்தில் அவர்களுக்கு நாம் மனதார ஆற்றும் ஒரு நன்றி. முன்னோர்களை, அவர்கள் வாழ்வை நாம் நினைத்துப் பார்த்துப் பெருமைகொள்ள, நம்மை செம்மைபடுத்திக்கொள்ள, முறியாத உயிர்சங்கிலியின் தொடர்பாக இருந்தமைக்காக நன்றியறிதலை நாம் ஆண்டுதோறும் தெரிவித்துக்கொள்ளச் செய்வதே அவர்களுக்குச் செய்யும் நீர்கடன்கள்

மேலும்: அஷோக் உரை
வறியவர்களுக்காக, உண்ணும் உணவு, இருக்குமிடம், உடுக்க உடை போன்றவற்றை சமுதாயத்தினரே தங்கள் அறச்செயல்களில் ஒன்றாகச் செய்தல் வேண்டும். முந்தைய நாட்களில் அன்ன சத்திரங்கள் ஆயிரம் நாட்டியதும் அதனால்தான். பின்னாளில், பெரும்பாலான சத்திரங்கள் சோம்பேறி மடங்களாகப் போனதும் உண்மைதான். அது தனி கதை! சமுதாயத்தினரின் ஒருங்கிணைந்த வள்ளன்மையே, வறுமையை முழுதாக ஒழிக்கக்கூடிய வழி!

பரிமேலழகர் உரை
துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
இல்வாழ்க்கை - il-vāḻkkai   n. இல்¹ +.Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்க்கை (குறள், 5, அதி )  ; மனையாளோடு கூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

இல்வாழ்வான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவன். il-vāḻvāṉ   n. id. +.Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).  

என்பான் - என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன்.

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).

உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)

மூவர்க்கும் - பிரமன், திருமால், சிவன்ஆகியமும்மூர்த்திகள்; அப்பர்; சுந்தரர், திருஞானசம்பந்தர்ஆகியமூன்றுநாயன்மார்கள்; தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்; பிள்ளைகள், பெற்றோர், உறவினர்

நல்லாற்றின் - நல்லாறு - நல்வழி - nal-l-āṟuṭaiyāṉ   n. நல்¹ + ஆறு¹ + உடையான் A man of goodmorals, one whose conduct is unimpeachable,opp. to tī-y-āṟuṭaiyāṉ; நல்வழிசெல்வோன். (W.)

நின்ற - நின்று - niṉṟu   id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
இல்வாழ்க்கை என்னும் இல்லறத்தில் வாழும் வாழ்க்கையை வாழ்பவன் என்பவன், இதே (இல்வாழ்க்கை) இயல்போடு வாழும் தன்னுடைய பெற்றோர்கள், மனையாள், பிள்ளைகள் ஆகிய மூவரையும் நல்வழியில் நின்று அவர்களுக்கு துணையாக ஆதரவாக இருக்க வேண்டும். அதுவே இல்லறம்.  அதுவே இல்லறத்தில் வாழ்பவனின் கடமை.

அஃதாவது, இல்லறத்தில் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை என்பது நமக்கு நேரடியாக தோர்புடைய நம்மை பெற்றெடுத்தப் பெற்றோர்கள், நாம் மணந்த மனைவி (கணவன்), நாம் பெற்றெடுத்தப் பிள்ளைகளை நல்வழியில் பேணிக் காப்பதே ஆகும். அதை தவிர வேறொன்றும் இல்லை. இங்கே உறவினரை பேண வேண்டும் என்று கூட திருவள்ளுவர் சொல்லவில்லை. ஏனெனில் அது நம்முடைய முதற்குடும்பம் அன்று.

இதையொட்டியே, ஔவையும், “இல்லறமல்லது நல்லறம் அன்று” என்று கூறியதும்.

பி.கு: ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று சொன்ன திருவள்ளுவர், தான், தன் குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் சிந்திப்பவரும் அல்லது நம்மை சிந்திக்கச் சொல்பவரும் அல்ல. அவர் இங்கே சொல்வது இல்லறத்தில் ஆற்ற வேண்டிய முழுமுதற் கடமை. இது (மூவருக்கு துணையாக இருத்தல்) எளிதாக தோன்றினாலும் ஆனால் இதுவே பெரும்பாலான இடங்களில் கடினமாகவே இருக்கிறது.

அதனால் தான் திருவள்ளுவர் இல்லறத்தில் உறவினர்களை சேர்த்து சுமையை அதிகரிக்கவில்லை போலும் (ஏனெனில் உறவினர்கள் ஒரு முடிவில்லா கணக்காகக் கூட மாற வாய்ப்பு உண்டு). ஒரு தனி மனிதனாக ஒருவன் செய்ய வேண்டிய அறம் பற்றி மற்ற குறள்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, இல்லாளோடு கூடி வாழ்தலினது சிறப்பு.இந்நிலை அறம் செய்தற்கு உரிய இருவகை நிலையுள் முதலது ஆதலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது)

இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.).

மணக்குடவர் உரை
இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

மு.வரதராசனார் உரை
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

குறள் 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பும்  -  அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

அறனும் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம்

உடைத்து - உடை-தல்
uṭai-   4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burst into fragments; தகர்தல் என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல் உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossom as a flower; மலர்தல் கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ 12, பெண் 3). 7. To be discomfited, routed, broken, as the ranks of an army; தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18). 8. To be dispirited, dejected,as one's heart with grief; to be in despair;மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10). 9. To become poor, reduced in circumstances; எளிமைப்படுதல். (பிங்.) 10. To be divulged, to become publicly known; வெளிப்படுதல் 11.To die; சாதல் உடைந்துழிக்காகம்போல் (நாலடி,284).  

ஆயின் - ஆனால்

இல்வாழ்க்கை - மனையாளோடு கூடி வாழ்கை; இல்லறத்தில் வாழ்கை

ண்பும் - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

பயனும் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

அது - அஃது; அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர்; ஆறாம் வேற்றுமை ஒறுமையுருபு.

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் கணவன் மனைவி என்று இருவர் முக்கியமாக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து இவர்களது பிள்ளைகள். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேசம் கொண்டு அன்பு செலுத்தவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பு செலுத்த வேண்டும்.

இல்வாழ்க்கையில் நேர்மையும் ஒழுக்கமும் மிக அவசியம். ஒருவர் மற்றோருவரிடம் நேர்மையாக இருத்தல் வேண்டும். உடற்கின்பத்திற்கு மட்டும் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது என்பது இல்வாழ்க்கையாகாது. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நேர்மையாக இருத்தல் வேண்டும். ஒருவருக்கு ஒருவர் மனம் ஒத்து இல்வாழ்க்கை நடத்த வேண்டும். இருவரும் மனம் கோணாமல் இருத்தல் வேண்டும். இல்வாழ்க்கைக்கென்ற கோட்பாடுகளையும் பின்பற்றி, கடமைகளையும் ஆற்றி வாழ வேண்டும்.  அதுவே அறம்.

கணவன் மனைவி ஆகிய இருவரும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர்களாய் இருத்தல் வேண்டும். பிள்ளைகளை சான்றோராய் வளர்த்தல் வேண்டும். அறம் அறிந்து அவ்வழியில் செல்லும் பிள்ளைகளாய் அவர்களை வளர்த்தல் வேண்டும். அதுவே அறம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறுவார்கள். அறம் என்றால் தர்மம் அதாவது ஒருவர் ஆற்றவேண்டிய கடமைகள். இல்லறவாழ்வில் ஒருவர் இல்வாழ்க்கையின் கடமைகளை ஆற்றவேண்டும். அவ்வாறு ஆற்றினால் அவர் பொருளை ஈட்ட முடியும். அவ்வாறு தேவையான அளவு பொருள் இருந்தால் இன்பம் வாழ்வில் பயனாய் கிட்டும். காமமும் சுவைக்கும். கல்யாணம் செய்து கொண்டு வேலைக்கு செல்லாமல் வீண் செலவு செய்தால் பொருள் தங்காது தரித்திரம் ஒட்டிக்கொள்ளும். இன்பம் இருக்காது.

ஆதலால் ஒருவர் இல்வாழ்க்கையில் அன்பும் அறனும் மலர்ந்தால் (மலரச் செய்யதால்) அதுவே அவ்வாழ்க்கைக்கு அழகாகவும் வண்ணமாகவும் செல்வமாகவும் அமையும்.

மேலும் அஷோக்  உரை


மணவுறவின் வெற்றி என்பது ஓர் எல்லைவரை உகந்த மனிதரை தெரிவுசெய்வதில் உள்ளது. ஆனால் வாழ்க்கையை முடிந்தவரை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது அதன் அடுத்தபடி. மாற்றிக்கொள்ள இயலாதவர்களால் ஒருபோதும் வெற்றிபெற்ற வாழ்க்கையை அமைக்கமுடியாது. அந்த இலட்சிய துணையைத்தான் தெரிவுசெய்வேன் என எவரேனும் தேடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் வாழ்க்கைதான்.

மணவாழ்க்கை மட்டுமல்ல நட்புகளே கூட இந்நட்பு என்றென்று நீடிக்கும், எந்நிலையிலும் வளரும் என எண்ணிக்கொண்டாலொழிய அழமாக நீடிக்கமுடியாது. பிடித்தால் சேர்ந்திருப்போம், தேவையான அளவுக்குக் காட்டிக்கொள்வோம், பயன்படும்வரை நட்புடன் இருப்போம் என ஒரு நட்பைத் தொடங்கினாலே அது கசப்புடன் முறிவதைத் தடுக்கவியலாது.

சுருக்கமாகச் சொன்னால், உறவுகளை ஒருபொருட்டாக நினைக்காத உள்ளம் கொண்டவராக இருந்தால், எல்லா உறவுகளும் அதற்கான குறைந்தபட்சத் தேவைக்கு மட்டுமே உரியவை என உணர்ந்து உணர்வுரீதியாக ஈடுபடாதவராக இருந்தால் சேர்ந்துவாழ்தல் உகந்த வழிமுறையாக இருக்கும்.
....
.....

பெண்ணும் ஆணும் தங்கள் உரிமைகளை, இடங்களை வரையறைசெய்துகொண்டால் திருமண உறவில் இல்லாத எந்த வசதி சேர்ந்துவாழ்வதில் உள்ளது? 
....
....
எந்நிலையிலும் ஆண்பெண் உறவு என்பது சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டதாக, கண்ணீரும் சிரிப்பும் நிறைந்ததாகவே இருக்கும். அதுவே அதன் அழகு. அதில் வெற்றியும் தோல்வியும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதெல்லாம் இல்லாத நேர்த்தியான வணிக ஒப்பந்தம்போல உறவை அமைத்துக்கொண்டால் என்ன சுவாரசியம்? சரி, அந்த உடலுறவேதான் எவ்வளவுநாள் சுவாரசியமாக இருக்கும்?

ஒப்புமை
”அன்பிலன் அறனிலன் எனப்படான்” (கலி 74:6)
“பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்” (நற் 160:2)

பரிமேலழகர் உரை
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும்.

இல்லறவாழ்க்கை இருபகட்டொருசகட் டொழுக்கம் போல்வ தாகலின், கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும் அறம் பயனும் ஆகும் என்பது நிரனிறை.

மணக்குடவர் உரை
இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - இல் வாழ்க்கை அன்பும் அறமும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் - அவ்வுடைமை (இல் வாழ்க்கையின்) பண்பும் பயனு மாம்.

அகலம்: ஈண்டும் இல் வாழ்க்கை என்றது இல் வாழ்வாரைக் குறித்து நின்றது. பண்பு -தன்மை. பயன்- ஊதியம். நச்சர் பாடம் ‘உடைத்தாய வில்வாழ்க்கை’ ; ‘பயனுந் தரும்’.

கருத்து: அன்புடைமையும் அறனுடைமையும் முறையே இல் வாழ்க்கை யின் பண்பும் பயனும் ஆம்.

Thirukkural - Management- Married Life
What is not there for a husband or what is missing in his married life, if his wife is virtuous?  That means a wife with all the positive qualities: passion, patience, politeness, participation, perspective, and positive thoughts. On the contrary, what does a husband have when his wife is not virtuous? What is available to him when his wife lacks passion, patience, politeness, participation, perspective, and positive thoughts?

When we look at married Me only from a husband's point of view, we will miss the other side. The same Kural can be adapted to include husbands also. What is not there for a wife or what is missing in her married life, if her husband is virtuous? That means a husband with all the positive qualities: passion, patience, politeness, participation, perspective,  and positive thoughts. On the contrary, what does she have when her husband is not virtuous? What is there when he lacks passion, patience, politeness, participation, perspective, and positive thoughts?

Two things make one's married life successful. One is love and the other is being virtuous. A couple's married life becomes meaningful and successful when the couple shower their affection on each other and express love to each other, assures Kural 45.


Love and virtue are the flower and fruit
Of domestic life.

Love and virtue are the founding pillars of a blissful married life. If the husband is true to himself and the wife is true to herself, the relationship  will take care of itself. The qualities and gains of amarried life are to have love and virtuous practices. 

English Meaning - As I taught a kid - Rajesh
In a married life, husband and wife play a major role. If husband and wife take care to ensure the foundations of a marriage viz, love/affection and the marriage dharma/duties/virtue pervade in the family life, then that marriage would have a character/meaning and fruit/result/progress/growth/success. Such a marriage is a blissed married life. 

Questions that I ask to the kid
What are essential for a meaningful and successful marriage?
What should pervade in a married life?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்.

வையத்துள் -  பூமி, உலகத்தில்

வாழ் - முறைமை
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை.
வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம்

வாழ்வாங்கு  - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது

வாழ்பவன் - வாழ்கின்றவன்

வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி

உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

உறையும் - பெருமை, உயரம், நீளம்

தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

தெய்வத்துள்  - கடவுள்

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

வைக்கப்படும் - வணங்கப்படும்
வைக்கப் படும்- கருதப் படும்

முழுப்பொருள்
ஒருவன் இல்லறத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது அவனால் தெய்வீக நிலையை அடைய முடியுமா? முடியும் என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் இல்வாழ்கையில் வாழ்வதற்கான நெறிகளை கடைப்பற்றி நெறி தவறாது வாழ்ந்தால் அதுவே சிறப்பான வாழ்வு. அத்தகையவர்களை வான் உயரத்தில் இருக்கும் தெய்வங்களாக வைத்து வணங்க படுவர். தெய்வத்திற்கு நிகரான பெருமை அவர்களுக்கு கிடைக்கும்.

உதாரணமாக ஒரு குடும்பத்தில் ஒருவர் அக்குடும்பம் சிறக்க காரணம் பெற்றார் என்றால் அவர் அக்குடும்பத்தினால் பல ஆண்டுகாலம், பல வம்சங்களாக போற்றப்படுவார்.

அதுமட்டும் இன்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது இந்திய மரபு. ஆகவே மூதாதையரும் முனிவரும் வீரரும் தெய்வங்களாவது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ராமன் விவேகமும் புகழும் மிகுந்த மன்னன் என்றவகையில் தெய்வமாக ஆனது இயல்பானதே.

இதையே முன்பு குறளிலும் அழுத்தமாக கூறி இருப்பார் குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ”மகிழ்ச்சிக் கணக்கு” என்ற கட்டுரையில் வாழ்வது பற்றி இப்படி கூறுகிறார்.

கடமைகள் செய்யப்படவேண்டியவையே. ஆனால் மனிதன் வாழ்வது கடமைகளுக்காக அல்ல.  மகிழ்ச்சிகளுக்காக.


பிறவிப்பெருங்கடல் நீந்துவது பற்றி வள்ளுவர் சொல்வதன் பொருள் என்ன? சமண , இந்து மரபுகளின்படி இந்தப் பிறவியில் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அடைந்து நிறைவுறுபவர் வீடுபேறு அடைகிறார். வீடுபேறு என்பது மறுபிறவி என்னும் சுழலில் இருந்து விடுபடுவது. அதையே பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடத்தல் என்கிறார்.

அதாவது இங்கே அறம் நிறைந்து, அவ்வறம் செய்வதற்கான பொருள் அடைந்து, இன்பமும் நிறைந்து வாழ்ந்து செல்வதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுவே வீடுபேறு.

ஒருவர் வாழ்வின் இறுதியில் இவ்வாழ்வில் நிறைவுற்றேன் என அகத்தே உண்மையாக உணர்வார் என்றால் அவர் வீடுபேறு அடைகிறார். குறையுடன் உணர்கிறார் என்றால் அவர் விடுதலை அடையவில்லை.

அதற்கு வாழ்ந்து நிறைவது முக்கியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று அதையே வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் வாழ்வைத் துறக்கச் சொல்லவில்லை. சிறக்க வாழும்படிச் சொல்கிறார். வாழாது செல்லச் சொல்லவில்லை. வாழ்ந்து நிறையவே அறிவுறுத்துகிறார்.

ஜெ


புராணமயமாதல் (எழுத்தாளர் ஜெயமோகன்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது இந்திய மரபு. ஆகவே மூதாதையரும் முனிவரும் வீரரும் தெய்வங்களாவது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ராமன் விவேகமும் புகழும் மிகுந்த மன்னன் என்றவகையில் தெய்வமாக ஆனது இயல்பானதே.

மனிதர்களைக் கடவுள் போல ஆக்குவது ஒரு இந்திய மன அமைப்பு. அதற்கு ஆதாரமாக இருப்பவை மூன்று விழுமியங்கள். 1. மூத்தார் வழிபாடு 2. நீத்தார் வழிபாடு 3. குருவழிபாடு. ’வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தார் வானுறையும் தெய்வத்துள் வைக்கபப்டும் ‘ என்ற மரபுசார்ந்த நம்பிக்கை இந்த மன அமைப்புக்கு வழியமைக்கிறது.

ஒருவர் வயதுக்கு மூத்தவராகும்போது அவரை உயர்ந்த இடத்தில் நிறுவி நாம் வழிபட ஆரம்பிக்கிறோம். கணிசமானவர்கள் வயதானவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மதிக்கப்படுவதை, வழிபடப்படுவதை நம் சமூகத்தில் காணலாம். தாய் தந்தையரைக் கடவுளின் இடம் நோக்கி நகர்த்திக்கொண்டே இருப்பதும் நம் வழக்கம்.

நம்முடைய பழங்குடிப் பண்பாட்டுக்காலம் முதலே நீத்தார் கடவுள்களாக ஆவது உள்ளது. ஒருவர் இறந்துவிட்டால் அவர் தூய இருப்பாக ஆகிவிடுகிறார். பிரபஞ்ச பேரிருப்புடன் கலந்து அதன் பகுதியாக ஆகிவிடுகிறார். அதன்பின் அவரும் கடவுளே என்று நம் தொல்மரபு நம்புகிறது. ஆகவே நாம் இறந்தவர்களைத் தெய்வமாக்கிக்கொண்டே இருக்கிறோம். வீரத்தால் இறந்தவர்கள், தியாகத்தால் இறந்தவர்கள் தெய்வங்களாகிறார்கள். பேற்றில் இறந்த பெண்கள் தெய்வங்களாகிறார்கள். ஒருவருக்கு சமூகம் ஓர் அநீதி இழைத்துவிட்டால் அந்தக் குற்றவுணர்ச்சியால் அவர்கள் தெய்வமாக்கப்படுவதும் உண்டு

கடைசியாக, குரு தெய்வமாகிறார். வாழும்போதே அவரை வழிபட ஆரம்பிக்கிறோம். இறந்தபின் கடவுள் ஆக்குகிறோம். நம் மரபில் காவி உடுத்தி மறைந்த அனைவரையும் புதைத்துச் சமாதிகட்டி அதைக் கோயிலாக்கி குருபூஜை செய்து வழிபடுகிறோம்.

இந்த மூன்று விழுமியங்களும் இந்து,சமண, பௌத்த,சீக்கிய மதங்களில் ஆழமாக வேரூன்றி அடிக்கட்டுமானமாகவே ஆகிவிட்டவை. இந்த ஆதார மனநிலைக்குப் பல்லாயிரம் வருடத்துப் பழக்கம் இருக்கிறது. இம்மனநிலை நம் சமூகம் அடைந்த ஆன்மீகவல்லமையை, அறிவுத்தொகையை, கலைகளைச் சிதறாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுவர உதவியிருக்கிறது. எத்தனை எதிர்மறைச்சூழலிலும் எதுவும் மறக்கப்படாமல் அடுத்த தலைமுறையைச் சென்றடைய தேவையாக இருந்திருக்கிறது இது
ஆகவே இன்று இதை மூடநம்பிக்கை என்றோ, அசட்டு உணர்ச்சி வெளிப்பாடு என்றோ புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப்பொறுத்தவரை நான் என் குருநாதர்களாக அமைந்தவர்கள் மீது பெரும்பக்தி கொண்டவனே. அது என் எளிமையையும் என் தகுதியையும் ஒரே சமயம் எனக்குக் காட்டுகிறது.

ஆனால் நவீன அறிவுத்தளத்தில் செயல்படும் ஒருவர் கூடவே பாகுபடுத்திப்பார்க்கும் தன்மையும் ஆராய்ச்சிமனநிலையும் கொண்டிருக்கவேண்டும். அது முன்னோடிகளையும் குருநாதர்களையும் அவமதிப்பதோ சிறுமைசெய்வதோ அல்ல. அவர்களிடமிருந்து மிகச்சிறந்ததைப் பெற்றுக்கொள்ளவே அவர்களை நாம் ஆராய்கிறோம். அவர்களின் வெற்றிகள் மட்டும் முக்கியமல்ல, தோல்விகளும் நமக்கு முக்கியமே. அவர்களின் தெளிவு மட்டுமல்ல, கலக்கமும் நமக்கு முக்கியமே. அவர்களின் பலம் மட்டுமல்ல பலவீனமும் முக்கியமே. அவையெல்லாமே நமக்குப் பாடங்கள்.

ஆனால் மரபான மனநிலை நம் சமூகத்தில் ஆழ வேரூன்றிருப்பதனால் நம்மால் முன்னோடிகளையும் வழிகாட்டிகளையும் அப்படி ஆராய முடிவதில்லை. ஆராதகர்களும் பக்தர்களும் மனம் புண்படுகிறார்கள். நாம் இழிவுசெய்துவிட்டதாக எண்ணி கொந்தளிக்கிறார்கள். எனக்கு மீண்டும் மீண்டும் இந்த அனுபவம் உண்டு. ஏனென்றால் நான் யாரை என் ஆசிரியராக நினைக்கிறேனோ அவரையே மிக கூர்ந்து ஆராயவும் செய்கிறேன்.

இன்று புகழ்வேண்டாதவர் என்றால் உலகியலில் பற்றற்றவர் என்று பொருள் வருகிறது.அது ஓர் உயர்ந்த பண்பாக கருதப்படுகிறது. ஒரு நற்செயலைச் செய்தபின் அதன் புகழை ஒருவர் நாடுவாரென்றால் அது செய்த நற்செயலுக்கு உலகியல் பிரதிபலனை தேடிச்செல்வதாகப் பொருள்படுகிறது.

ஆனால் சென்ற நிலவுடைமைச் சமூகத்தில் அப்படி அல்ல. புகழ் என்பது உருவாக்கப்படுவது அல்ல, தேடிவருவது. அன்றைய சூழலில் ஆன்றோரிடமும் மூதாதையரிடமும் சுற்றத்தோரிடமும் எளியோரிடமும் விண்ணுலகிலுள்ள தேவர்களிடமும் பெறப்படும் நற்பெயர்தான் புகழ். புகழால் எவருக்கும் உலகியல்நன்மை ஏதுமில்லை. அது முழுக்கமுழுக்க ஒரு ஆன்மிகச்செல்வம்தான். இன்று புண்ணியம் என்கிறோமே அதைப்போல.

அன்றைய விழுமியங்களின்படி இவ்வுலகில் ஈட்டவேண்டியது புகழ். மறுவுலகில் வீடுபேறு. இங்கு புகழை ஈட்டியவன் அங்கே வீடுபேறை அடைவான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான். உலகியல்புகழ் என்பது வீரம், கொடை, நோன்பு, கடமை, நெறிநிற்றல் ஆகியவற்றால் அடையப்படுவது.

புகழ் விரும்பப்பட்டதுபோலவே இழிபெயர் நரகத்திற்கு இணையாக அஞ்சப்பட்டது. வஞ்சினம் உரைப்பவர்கள் ‘என்னை புலவர் பாடாது ஒழிக’ என்று சொல்வதையும் நாம் பழைய பாடல்களில் பார்க்கிறோம். பெண்கொலைபுரிந்த நன்னன் என்பவனை புலவர் இழிபெயராக வரலாற்றில் நிறுத்திவிட்டதையும் காண்கிறோம்.

ஜெ

பரிமேலழகர் உரை
வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்).

மணக்குடவர் உரை
இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - இவ்வுலகத்தானேயாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

இல்லறவாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவனாக இருப்பனாதலாலும், இம்மையிற் செய்த நல்வினைப் பயனை மறுமையில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையினாலும், 'வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். தெய்வம் என்றது வகுப்பொருமை.

மு.வ உரை
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

பொருள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்-பூவுலகத்துள் (இல் வாழ்வான்) வாழ வேண்டிய படி வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ‡ வானுலகத்தில் வாழும் தேவருள் (ஒருவனாக) மதிக்கப்படுவான்.

அகலம்: அவ்வாறு வாழ்பவன் இறந்த பின்னர் வானுலகத்தில் தேவனாய் வாழ்வன் என்று உரைப்பினும் அமையும், கொழுநனைப் பேணிய பெண்டிர் இறந்த பின்னர் வானுலகத்தில் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்று ஆசிரியர் அடுத்த அதிகாரத்திற் கூறுகின்றமையால்.

கருத்து: இல் வாழ்க்கையை ஒழுங்காக நடாத்துகின்றவன் தேவனாவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar says that a person can live in this world and still attain'a Godly state. I.e he would be workshipped. How? When a person feels he has lived a fulfiled life.  To feel that one should do his dharma, earn money required for running the life/family and lead a happy life. If one is able to strike a good balance among dharma, money and happiness, he would feel fulfiled. Such a person can attain moksha. Hence, it is important to live the life and feel fulfiled. Such a person would be kept in the lines of God.

And if one sees our lives, we can see our ancestors, sages, warriors, kings are placed among Gods. 
For e.g., Lord Rama is the central character in epic Ramayana. He is worshipped as God because the character lives like that in that novel

Questions that I ask to the kid
Who would be kept among Gods? Why?
How to lead a fulfilled life? What the benefits? (major benefit is moksha)

இயல்பினான் இல்வாழ்க்கை

குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இயல்பு தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று

இயல்பினான் - இயல்பு அறிந்து அறத்தோடு (நெறிகளின் படி) இயந்து ; இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்தவன்.

இயல்பு - இயல்பு என்றென்பது இயற்கை. இயற்கை என்பது அறம் சார்ந்தது. அறத்திற்கு புரம்பாக இயற்கை இருக்காது 
-> இயல் - இயல்புகாண் டோற்றிமாய்கை ((சி. சி. 1. 3)
-> ஒழுக்கம். சால்பும் வியப்பு மியல்பும் குன்றின் (குறிஞ்சிப். 15)
-> நற்குணம்.ஏதிலா ரென்பா ரியல்பில்லார் (நான்மணி. 44)
-> நேர்மை 
-> முறை

இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை., இல்லற வாழ்க்கையில் கூடி

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்பவன் - வாழ்க்கையை நடத்துபவன் 
என்பான் - என்று சொல்லப்படுபவன்
வாழ்பவன் என்பான் - சிறப்புற வாழ்கின்றவர்கள் (நெறிகளின் படி) 

என்பான் - அப்படிப் பட்டவர்கள்

முயலுதல் - காரியம் முற்றுப்பெறும் பொருட்டு ஊக்கத்தோடு செய்தல்; வருந்துதல்; தொடங்குதல்.
முயல்வாருள் -  முயற்சிகளை மேற்கொள்வோரில்
-> மேலான  (பொருள்) வாழ்வு  வேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள்.   
-> தங்களுக்குரிய ஒழுக்க நெறிகளில் நில்லாது, தங்கள் அறத்தைத் தவிர்த்து, தங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லா அறத்தை முயன்று பார்ப்பவர்கள்.
-> நோன்பு கொண்டு முற்றும் துறக்க புலன்களை விட்டு இறை நிலைய அடைய முயலும் தவம் செய்கின்றவர்கள்.
(அவர்கள் முயற்சித்தான் செய்வார்கள் அடையமாட்டார்கள் என்றும் கொள்ளலாம்)

எல்லாம் - அவர்கள் எல்லோரையும் விட

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

தலை - சிறந்தவர்கள்; மேலானவர்கள்.

முழுப்பொருள்

முன்குறிப்பு: உலகியலை துறப்பதை பற்றி ஆழமாக புரிந்துக்கொள்ள எழுத்தாளர் ஜெயமோகனின் “விடுதல்” கட்டுரையை வாசிக்கவும்

ஜெயமோகனின் “திரள்” கட்டுரையையும் வாசிக்கவும்

இல்வாழ்க்கையில் அறநெறிகளை பின்பற்றி முறையாக இயல்புடன் இயைந்து வாழ்பவர்கள் எல்லோரும், மற்ற வழியில் இயல்பு அல்லாத வழிகளில் வாழ கடும் முயற்சி செய்பவர்களைவிட மேலானவர்கள். 

இயல்பினான் இல்வாழ்க்கை
ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படுவது. 'இயல்பினான் இல்வாழ்க்கை' என்றது இயற்கை ஒழுங்கு அமைப்பின் பாற்பட்ட இல்வாழ்க்கையக் குறித்தது. வாழ்க்கை வாழ்வதற்கே; பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே என்பதுவே வாழ்க்கையின் இயற்கை அமைவு. 

இயல்பு இல்வாழ்க்கை என்பது, காதல் பெண்ணோடு கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல், நன்மக்களைப் பெறுதல். பொருள் ஈட்டுதல், துய்த்தல், ஈத்து மகிழ்தல், புகழ் சேர்த்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

முயல்வாருள் - மேலான வாழ்வு பெற முயற்சி செய்கிறவர்கள்.
”இயல்பினான்” என்று தொடங்கி இல்லறத்தவரைச் சிறப்பிப்பதால், தங்களுக்குரிய ஒழுக்க நெறிகளில் நில்லாது, தங்கள் அறத்தைத் தவிர்த்து, தங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லா அறத்தை முயன்று பார்ப்பவர்களை, தடுமாறிய அறிவுடையவர்களைக் குறித்தே (இக்குறள்) சொல்லியிருக்க வேண்டும்.

தவம்
1) முக்தியாகிய வீடுபேறை முயல்வோர்
2) இறைவன் திருவருளைக் காண முயல்பவர்
3) பற்றினை விட முயலுகின்றவர், புலன்களை விடத் தவஞ்செய்வார்
4) ப்ரஹ்மசர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகள் உள்ளன. இதில் வானப்ரஸ்தத்தில் உள்ளவர்களை முயல்பவர்கள் என்றுகூறுகிறார் திருவள்ளுவர். . 

பொருள்
4) மேன்மேலும் பொருளீட்டி வாழ முயல்வர்
5) வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார் (அதாவது இல்வாழ்க்கை கடமைகளை தவிர்த்து சுகபோக வாழ்வில் திளைத்து வாழ்பவர்கள்)

அறம்
6) இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்பவர்.
7) திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்கள்

ஆக, முதலில் மேற்சொன்ன இல்வாழ்க்கையை அறநெறிகளுடன் வாழ்பவர்கள் எல்லோரும், ஒழுக்க நெறிகளில் நில்லாது, தங்கள் அறத்தைத் தவிர்த்து, பொருத்தமில்லா அறத்தை முயன்று பார்ப்பவர்களை விட சிறந்தவர்கள்.

உதாரணம் (நன்றி: தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு)(சுட்டியை சொடுக்கவும்)

இல்வாழ்க்கையை பற்றி பேசுகிற திருவள்ளுவர் பல இடங்களில் துறவுடன் ஒப்பிடுகிறார். அதனுடன் ஒப்பிட்டு துறவை விட இல்வாழ்க்கை சிறந்தது என்று சொல்ல முற்படுகிறார். 

துறவு வாழ்க்கை என்றென்பது காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசல் இல்லாத நேரத்தில் பயணம் செல்வதுப் போல. ஆனால் இல்வாழ்க்கை என்றென்பது காலையில் 8-8:30 மணிக்கு அண்ணா சாலையில் (Mount Road)இல் எதிரும் புதிருமான் சாலையில் பலத்த போக்குவரத்து மத்தியில் விதிகளை பின்பற்றி எந்தவிதமான மோதல்கள் இல்லாமல் சென்று சாதிப்பது செல்வதுப் போல. ஆக துறவத்தாரை விட பல சிக்கல்கள் மத்தியில் வாழ்கிறவன் இல்லறத்தான். அதுவும் அறத்தோடுக் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகிறான் என்றால் அங்கே துறவிலே சென்று சாதிக்கக் கூடியவற்றை கூட இங்கேயே சாதித்துவிடலாம். அதனால் தான் முயல்வாருள் எல்லாம் தலை என்கிறார் திருவள்ளுவர்.

இக்குறள் இல்லறத்தில் வெற்றிபெற்றவர்கள் துறவிகளை விட சிறந்தவர்கள் என்று கூறவில்லை. துறவுக்கு முயற்சி செய்யும் வானப்ரஸ்த்திரர்களை விட சிறந்தவர்கள் இல்லறத்தில் இருப்பவர்கள். 

குறளின் குரல்
நன்றி: அவனிவன் பக்கங்கள் அஷோக் (சுட்டியை சொடுக்கவும்)

குறள் திறன் (சுட்டியை சொடுக்கவும்)
இயல்பான வாழ்வு நடத்தும் இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு முயல்வோருள் சிறந்தவன் என்னும் பாடல்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் முயல்வார் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது பாடலின் பொருள்.
முயல்வார் யார்?

இயல்பினான் என்பதற்கு இயற்கைப்படி அல்லது இயற்கை உந்தும் வழி என்று பொருள் கொள்வர்.
தலை என்ற சொல்லுக்கு முதன்மை என்பது பொருள்.

முயல்வார் யார்?

முயல்வார் என்பதற்கு நேர் பொருள் முயற்சி செய்கிறவர்கள் என்பது. 
முன்னேற முயல்வார், மேலான வாழ்வு பெற முயற்சி செய்கிறவர்கள் என்று இதன் பொருளை நீட்டிக்கலாம்.

'பொருட்கு முயலுவார்' என மணக்குடவரும், 'உணவு உறக்கம் நீத்து உடலை ஒறுத்துத் தவஞ் செய்து அறியமுயல்வர்' எனப் பரிதியும் இச்சொல்லுக்குப் பொருள் கண்டனர். பரிமேலழகர் 'புலன்களை விட முயல்வார்' என்கிறார்.
பிற்காலத்தவர்களில் சிலர், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர், இறைவன் திருவருளைக் காண முயல்பவர் என்று பொருள் கூறினர்.
பற்றினை விட முயலுகின்றவர், புலன்களை விடத் தவஞ்செய்வார், உயிர் உய்திபெற முயல்வோர், நல்ல கதி அடைய முயற்சி செய்வோர் என்றனர் வேறு சிலர்.

இல்லறத்தின் முயல்வார் என்றபடியும் ஓர் உரை உள்ளது.
மேன்மேலும் பொருளீட்டி வாழ முயல்வர் என்றும் பொருள் கூறினர். 
நாமக்கல் இராமலிங்கம் முயல்வார் என்பதற்குப் 'பலவித முயற்சிகள் செய்கிறவர்கள் அதாவது துறவறம் பூண்டு பல வழிகளில் தவம் செய்கிறவர்கள், சாகாமலிருக்க காயகற்பம் தேடுகிறவர்கள், வெவ்வேறு சித்திகள் பெறுவதற்காக வெவ்வேறு மந்திர தந்திரங்களை நாடுகிறவர்கள் முதலானோர்' என்பார்.

'இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்கள்' என்பது சி.இலக்குவனார் முயல்வார் என்றதற்குத் தரும் விளக்கம். 

குன்றக்குடி அடிகளார் 'வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார்' என்ற விளக்கம் பொறித்துள்ளார்.
வ சுப மாணிக்கம் 'முன்னேற முயல்வார்' என்று பொருள் தருகிறார்.

முயல்வார் என்பது வாழ்க்கை முயற்சி செய்வார் என்ற பொருளிலே இக்குறளில் வந்தது என்று தோன்றுகிரது. இது வாழமுயற்சி செய்வோர்- சிறப்பாக 'வெற்றி வாழ்க்கை முயல்வார்' குறித்தது என்று கொள்ளலாம். வாழ முயல்வார் என்று சொல்லும்போது வீடு பேற்றை முயல்வோர், புலன்களை விடத் தவஞ்செய்வோர் என்ற கருத்துக்கள் இக்குறளுக்கு அமையா.
குன்றக்குடி அடிகளாரின் 'வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார்' என்ற பொருள் பொருந்தி வரும்.

ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படுவது. 'இயல்பினான் இல்வாழ்க்கை' என்றது இயற்கை ஒழுங்கு அமைப்பின் பாற்பட்ட இல்வாழ்க்கையக் குறித்தது. வாழ்க்கை வாழ்வதற்கே; பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே என்பதுவே வாழ்க்கையின் இயற்கை அமைவு. 
இயல்பு இல்வாழ்க்கை என்பது, காதல் பெண்ணோடு கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல், நன்மக்களைப் பெறுதல். பொருள் ஈட்டுதல், துய்த்தல், ஈத்து மகிழ்தல், புகழ் சேர்த்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

மாந்தரை வாழவிரும்புகிறவர்கள், உலக வாழ்க்கையை விரும்பாதவர்கள் என்று இரண்டாகக் கொண்டால் துறவு மேற்கொண்டவர்களும் துறவுச் சிந்தனையுள்ளவர்களும் உலக வாழ்க்கையை விரும்பாதோரில் அடங்குவர். முயல்வோர் என்ற சொல் வாழவிரும்புவோர் பற்றியது. எனவே துறவியரும் தவசிகளும் இக்குறளில் பேசப்படவில்லை என்று கொள்ளவேண்டும். மணக்குடவர், மு வ., வ சுப மாணிக்கம், குன்றக்குடி அடிகளார் போன்றோர் இப்பாடலை இப்பொருளில் அணுகி உரை கண்டவர்கள்.

வாழவிரும்புவர்கள் வாழ்வில் வெற்றியடைய விரும்புவார்கள். அப்படி வாழ்க்கையில் வெற்றி பெற மாந்தர் வெவ்வேறூ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வாழ்க்கை வெற்றியை எது தீர்மானிக்கிறது? செல்வம் சேர்ப்பதும் மனித வாழ்வின் வெற்றியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது. இதனால்தான் மணக்குடவர் முயல்வார் என்பதற்கு பொருட்கு முயறல் என்று குறிப்பு தந்தார். இல்லறத்தை ஒழுங்காக நடத்தினால் 'விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்திற்கு'வித்துமிடல் வேண்டாமை போலப் பொருள் தானே உண்டாம் என்று இதனை பரிப்பெருமாள் வேறுவிதமாக விளக்குவார்.

ஆனால் பொருள் மட்டுமே வெற்றியைக் குறிக்காது. மக்கட்செல்வம், புகழ் போன்ற மற்ற பேறுகளைப் பெற்று நல்வாழ்வு வாழ மாந்தர் முயல்கின்றனர். இயல்பான இல்வாழ்வு வாழ்ந்தாலே வெற்றி வாழ்க்கைதான் என்கிறார் வள்ளுவர். இன்னொரு வகையில் சொல்வதானால் வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவனே வெற்றி பெறுகிறான். எனவே அத்தகைய வாழ்வு வாழ்பவனை முயல்வாருளெல்லாம் தலை என்கிறார்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் மேலான வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது இக்குறட்கருத்து.

துறவிலும் சிறந்தது இல்வாழ்க்கை (நன்றி: TamilVu)

‘பற்று‘ இல்லாதவர் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை என்பார்கள் சமயவாதிகள். அந்தப் பற்றைத் துறப்பது மிகவும் கடினம். இவ்வுலகப்பற்றை, குறிப்பாக இல்வாழ்க்கைப் பற்றைத் துறத்தல் அரியசெயல். எனவே, வாழ்க்கைப்பற்றை - இல்வாழ்க்கைப் பற்றைத் துறந்துவாழும் துறவிகளைப் பெரிதும் போற்றி ஒழுகுவர் சமயச் சார்புடையவர்கள். அதனால் சமயத்துறவிகள் சமுதாயத்தில் பெரும் செல்வாக்குடன் இருப்பதுடன் அறவுரை கூறும் ஆசான்களாகவும் திகழ்கின்றனர்.

‘துறவு‘ என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்து, துறவு பற்றிப் பல கருத்துகளை வழங்கிய வள்ளுவர், இல்லறத்திற்குக் கொடுக்கும் தலைமை, அவரது சமயம் கடந்த மாட்சிமையைக் காட்டும். எனவே, இல்லறத்தினைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது எல்லாம், துறவறத்தைவிட, அது சிறப்பு வாய்ந்தது, உயர்ந்தது என்றே சொல்லுகிறார். இதற்கு முன்னர் இல்லறத்தினால் கிடைக்கும் இன்பம் பற்றிக் குறிப்பிடும்போது (குறள் :46),
“இல்வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கத்தின்படி ஒருவன் வாழ்ந்தால் போதும்; அவன் இல் வாழ்க்கைக்குப் புறம்பான துறவறத்திற்குச் செல்லவேண்டாம். அங்கு இதைவிட சிறந்த பயன் எதுவும் இல்லை” என்று கூறினார். அடுத்த நிலையில், நல்ல முறையில், இல்வாழ்க்கைக்கு உரிய அறத்துடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு பல திறத்தாலும் முயற்சி செய்பவர்கள் அனைவரையும் விட மிகவும் உயர்வானவன், தலைமையானவன் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை
(குறள்:47)

(இயல்பினான் - அறத்தின் இயல்போடு வாழ்பவன், 
தலை - தலைமையானவன்)

இதில் ‘முயல்வார்‘ என்பதற்குப் பலரும் பலவிதமான கருத்துரைகளை வழங்கினாலும், அவர்களும் மறைமுகமாக, இல்லறத்திற்குப் புறம்பான முயற்சியாகிய துறவு நிலையையே சுட்டுகின்றனர். பரிமேலழகர் முதல் பாவாணர் வரையிலும் ‘முயல்வார்‘ என்பது துறவு நெறியாரையே குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இல்வாழ்க்கையில் அறத்துடன் வாழ்பவன், சமயத்தாரால் போற்றப்படும் துறவிகளை விடவும் உயர்வானவன், தலைமையானவன் என்பது வள்ளுவர் கருத்து. மேலும் நல்லறத்துடன் நடத்தப்படும் இல்லறம், இவ்வுலக வாழ்க்கையில் தலைமையானது, என்று வள்ளுவர் கருதுகிறார்.

அறநெறியில்
இல்லறம் கொள்பவன்
பிறநெறியில் சிறப்பாய் வாழ
முயற்சிப்பவனவிட சிறந்தவன்

பரிமேலழகர் உரை
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான்-இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் கலை-புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
விளக்கம் 
(முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பலவகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்தலின், 'தலை' எனவும் கூறினார்.)

மணக்குடவர் உரை
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.

மு.வ உரை
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான்- (இல் வாழ்க் கைக்குரிய) இயல்போடு (கூடி) இல் வாழ்க்கையை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை ‡ (வீட்டுப் பேற்றை அடைய) முயல்பவரு ளெல்லாம் முதன்மையானவன்.

அகலம்: ‘ஆன்’ என்னும் உருபு ‘ஓடு’ என்னும் பொருளில் வந்தது. தாமத்தர் பாடம் ‘என்ப’. மற்றை நால்வர் பாடம் ‘என்பான்’.

கருத்து: இயல்பினான் இல்வாழ்வான் வீட்டுப் பேற்றை அடைய முயல்வாருள் முதன்மையானவன்.

Thirukkural - Management - Married Life
A husband who lives a virtuous family life spontaneously or by instinct is superior to someone who attempts, against all personal odds, to lead a virtuous life. Valluvar's advise, in Kural 47, is that the intention to lead a virtuous life should come from within. When the intention is spontaneous, the outcome of that intention will be greater than the expected outcome.

A householder by instinct scores
Over others striving in other ways.

பிதாமகரே, ஒவ்வொரு வழியிலும் அதற்குரிய தவம் தேவையாகின்றது. மைந்தரைப்பெற்று பொருளீட்டி வளர்த்து குடிப்பொறுப்புகளை முழுமைசெய்து ஓய்ந்து குலம்பெருகக் கண்டு நிறைவடையும் எளிய உலகியலான் இயற்றுவதும் தவமே” என்றார். “துறப்போர் துறக்கமுடிவது அவர்கள் எய்தவிருப்பது துறந்தபின்னர்தான் என்பதனால்தான்.”

English Meaning - As I taught a kid - Rajesh
The one lives normal live and fulfills his duties especially in a family life is better than a person who runs away from family life and "trying to lead" a sage life (not exactly a sage)

Questions that I ask to the kid
Will you recommend a person run away from normal family life in order to lead a sage life?