Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_033. Show all posts
Showing posts with label Athikaaram_033. Show all posts

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

குறள் 330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

யார் - யாவர்

நீக்கியார் - போக்குகியவர் 

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

செயிர் - குற்றம்; கோபம்; போர்; வருத்துகை; நோய்.

உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி

செல்லாத்  - செல்லா-தல் - cel-l-ā-   v. intr. செல்² + ஆ-.1. To be paid or discharged, as loan; கடன்தொகை செலுத்தப்படுதல். 2. To be dead andgone; இறந்துபோதல். அவர் செல்லானார். Loc.  

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

யவர் - அவர் 

முழுப்பொருள்
நோய்/நோய்கள் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறவியில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தவர்கள் கூறுவர். 

குறள் 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் என்று முன்னரே கூறியிருந்தார் திருவள்ளுவர். நாம் பிறருக்கு செய்யும் துன்பம் நமக்கு நோயாக வரும் என்பதே அக்குறளின் கருத்து. 

பிற உயிர்களை கொல்லுதல் அவ்வுயிர்களுக்குச் செய்யப்படும் மிகப் பெரிய துன்பமாகும். கொலை செய்தால் இம்மையிலும் நோயாக வரும் மறுமையிலும் ஊழ்வினைப்பயனாக நோயென வரும். ஆதலால் எச்சரிக்கிறேன் உன்னை, பிற உயிர்களை கொல்லாதே என்று கண்டிப்பாக அறிவுறுத்துகிறார். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அக்கேபோல் அங்கை யொழிய விரலுழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்” (நாலடி 123)

பரிமேலழகர் உரை
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.

வினை -தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினையர் - தொழிலை செய்பவர் 

ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

மாக்கள் - மனிதர்கள்; பகுத்தறிவிலார்; குழந்தைகள்; விலங்குகள்.

புலைவினையர் - pulai-viṉaiyar   n. id. +.Abominable, vile persons; men of execrabledeeds; இழிதொழிலாளர்.

புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

தெரிவு - அறிவு; தெரிந்தெடுக்கை; தெரிந்தெடுக்கப்பட்டது; தோற்றம்; அறியப்பட்டது.

தெரிவார் - அறிந்தவர்கள்

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
பிற உயிர்களை கொலைச் செய்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள் பகுத்தறியும் திறனில்லாத மாக்கள் எனப்படுவர். அவர் அத்தொழிலில் இழிவையும் அதனால் வரும் பாவத்தையும் அறியாதவர்கள். ஆனால் கொலைச்செயலை இழிவானவர்கள் செய்யும் இழிச்செயல் என்றே நூல்கள்பல கற்றுணர்ந்துத் தெளிவான அறிவுடைய சான்றோர்கள் கருதுவார்கள். ஆதலால் கொலை தொழிலில் ஈடுபட்டு உள்ளவனே, அந்த இழிச்செயலை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.   

மாக்கள் என்ற சொல்லுக்கு விலங்குகள் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது சரியான பொருளென்று எனக்குப் படவில்லை. கீழே "மக்கள் - மாக்கள் - மாக்காள் - மாக்கட்கு!" என்ற சிறு கட்டுரையை வாசித்தால் ஏன் என்று விளங்கும். 

இக்குறளில் மாக்கள் என்றால் பகுத்தறியும் தன்மையற்றவர்கள் என்ற பொருளே பொருந்தும். ஏனெனில் கொலை செய்வது ஒருவர் என்றாலும் அதனை ஊனையோ அல்லது தோலையோ பயன்படுத்துவது வேறொருவர் ஆதலால் பயனடைந்தவருக்குத்தான் பாவம் என்று நினைத்துக்கொள்வர்கொலை செய்கின்றவர். பிற உயிர்களை கொலைசெய்வதனால் வரும் பயனை வேறொருவர் பெற்றாலும் அதனை வசதியாக செய்துக்கொடுப்பவர்க்கும் பாவம் உண்டு. ஒருவர் ஒரு உயிரை கொலைசெய்து உண்ணவேண்டும் என்றால், அவர் புலாலை உண்ணவே மாட்டார். ஆதலால் இந்த மாமிச உணவுச் சங்கிலியில் பயனாளர்களுக்கு பாவம் உள்ளதுப்போல அதனை உற்பத்திச் /வணிகம் செய்வோருக்கும் பாவத்தில் பங்கு உண்டு. இதனைப் பகுத்து அறியாதவரை மாக்கள் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

கொலைசெய்வோர் வைக்கும் வாதம் என்னவெனில், நான் வெறுமென கொலை தானே செய்தேன். ஆனால் ஊனை உண்டவர்களும் தோலை ஆடையாக காலணியாக அணிந்துக்கொள்வோரும் தானே இறுதியாக பயன் அடைந்தார்கள். அவர்கள் இல்லையெல் நான் இல்லை என்று. திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் "குறள் 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்". மாமிச உணவை உண்ணுவதற்காக இவ்வுலகில் மக்கள் இல்லையென்றால் மாமிச உணவை விற்பதற்கும் இவ்வுலகில் மக்கள் இருக்க மாட்டார்கள். ஆதலால் எங்களை ஏன் இழிவானவர்களாக கருதுகிறீர்கள்?  
அதற்கான பதில் 
1) திருவள்ளுவர் அங்கே(குறள் 256) ஊனை உண்ணுவோர் இல்லையெனில் விலைப்பொருளாக விற்போர் இருக்க மாட்டார்கள் என்று தான் சொன்னாரே தவிர மாமிசத்தை விற்போருக்கு இழிவு இல்லை என்று சொல்லவில்லை. மேலும் உண்ணுவோர் இருந்தாலும் அவர்களுக்கு ஆசையிருந்தாலும் விற்போர் இல்லையெனில் உண்ணுவோர்க்கு ஏது ஊன்? 
(இந்த வாதம் குறிப்பாக தமிழ்நாட்டில் மதுபானங்கள்/சாராயம் விற்கும் தொழிலதிபர்களுக்கும் பொருந்தும் ஏனெனில் மக்கள் குறைக்க தொடங்கினால் நாங்கள் உற்பத்தியை குறைத்துவிடுவோம் என்று கூறும் இவர்கள். உற்பத்தி செய்யவில்லையென்றால் மக்கள் குடிக்கமாட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்)

2) திருவள்ளுவர் அங்கு உணவு/தோல் தொடர் சங்கிலியில் நேரடிப் பயனாளர்களை சாடினார். இங்கு மறைமுக பயனாளர்களை சாடுகிறார். (என்ன சொல்கிறீர்கள்?)  பிறர் உயிர்களை கொலைசெய்பவன் பொழுதுபோக்கிற்காகவா கொலை செய்கிறான்? இல்லையே. அவன் ஊனையும் தோலையும் விற்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு இலாபத்திற்காக அதில் இருந்து வரும் மாத சம்பளத்திற்காக தான் செய்கிறான். ஊரில் வேறுத் தொழில் இல்லையா என்ன? ஆதலால் கொலைச்செய்து தொழில்புரிவன் ஒருவிதத்தில் பயனாளன். ஆதலால் அவனுக்கும் கொலை செய்தலில் சரிசமமான பங்கு உண்டு. அவனுக்கு மட்டும் இன்றி இந்தத் தொடர் சங்கிலியில் இடையில் வாங்கி விற்கும் இடைத்தரகர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர். (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
மு.வரதராசனார் உரை
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

சாலமன் பாப்பையா உரை
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

மக்கள் - மாக்கள் - மாக்காள் - மாக்கட்கு! (தகவல் மட்டுமே)
"மாக்கள்" என்னும் சொல் பழந்தமிழில் பரவலாக வழங்கி இப்பொழுது வழக்கு வீழ்ந்துவிட்டது. மேற்போக்காக காண்கையில் இது "ஆ" என்பதற்குரிய பன்மை வடிவமான "ஆக்கள்" என்பது போன்று விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்லான "மா" என்பதற்குரிய பன்மை வடிவம் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று.

தொல்காப்பியத்தின் மூன்றாம் இயலான பொருளதிகாரத்தின் மரபியலில் சில சூத்திரங்கள் உயிர்களை ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் ஈறாக வகைப்படுத்திக் காட்டுதலை அறிஞர் பலரும் அறிவர். இச்சூத்திரங்களுள் ஐந்தறிவுடையன பற்றிய இளம்பூரணர் உரையில்,

"மாவும் புள்ளும் ஐயறிவினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

என்றுள்ளது. ஆனால் பேராசிரியரின் உரையில்,

"மாவும் மாக்களும் ஐயறிவினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

என அமைந்துள்ளது.

இவ்விருவர் பாடங்களுள் தொல்காப்பியரின் எண்ணப் போக்கிற்கு ஏற்புடையது யாதென்பது ஆராய்ச்சிக்குரியது.

உயிர்க்கூட்டத்தில் பறவையினத்திற்குரிய சிறப்பிடத்தை நன்குணர்ந்த தொல்காப்பியர், கருப்பொருள்களை வரிசைப்படுத்தும் பொழுது அதற்கு உரிய இடத்தினை அளிக்கத் தவறினாரல்லர்.

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அன்னவை பிறவும் கருவென மொழிப - 20 - அகத்திணையியல்

என்பது அவர் திருவாக்கு. மாவையும் விலங்கையும் வெவ்வேறாக ஓதிய ஆசிரியர், தொடர்ந்து,

"எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
 அந்நில மருங்கின் வாரா வாயினும்
 வந்த நிலத்தின் பயத்த வாகும்"

எனச் சிறப்பு விதியும் வகுத்தார்.

இங்ஙனம் பறவையினத்திற்கு உரிய இடம் வகுத்த ஆசிரியர், உயிர்களை அவற்றின் அறிவிற்கு ஏற்ப வகைப்படுத்தும் பொழுது அவற்றைப் புறக்கணித்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் "மா" என்பதனுள் புள்ளை அடக்கிக் கூறினார் என்பதும் அவர் கருத்திற்கு இசைந்ததன்று. எனவே, இளம்பூரணர் கொண்ட பாடமே சரியானது என்று முடிவு செய்தல் தவறாகாது.

மக்கள் என்பார் விலங்குகளினும் மேலானோர் என்பதும், அங்ஙனம் மேன்மையுறுதற்கு அடிப்படையாக அமைவது அவர்க்கு ஐந்தறிவிற்கும் மேலான மனவுணர்வு அமைந்திருத்தலே என்பதுமே தொல்காப்பியர் கருத்து. ஒன்றிரண்டு உறுப்புகள் குறைவாகவுடையோரை எப்பெயரால் அமைப்பது என்பது பற்றி ஆசிரியர் கருதினாரல்லர். அப்படிக் கருதியிருப்பின், சொல்லதிகாரத்தில்,

"உயர்திணையென்மனார் மக்கட்சுட்டே அஃறிணையென்மனார் அவரல் பிறவே"

என்று விளக்கிய இடத்திலேயே மாக்கள் பற்றியும் விளக்கியிருப்பார்.

ஆண் தன்மை மிகுந்த பெண்ணையும்
பெண் தன்மை மிகுந்த ஆணையும்
எவ்வாறு வழங்குதல் வேண்டும் என விளக்கிக் கூறிய இலக்கண ஆசிரியர்கள், "மாக்கள்" என்பார் விலங்கொடு சேர்ந்து எண்ணத்தக்கார் என விதி வகுக்காமை நோக்கத்தக்கது. பகுத்தறிவு இல்லாரை விலங்கொடு சேர்ந்து எண்ணவேண்டும் என்ற கருத்து, பேராசிரியர் காலத்தில் நிலவியதன் விளைவாகவே இப்பாட வேறுபாடு தோன்றியது என்று கருதலாம்! இவ்விடைக் காலக்கருத்தை தொல்காப்பியர் மீது திணித்தலை ஏற்க இயலாது.

நச்சினார்க்கினியர் பேரறிவாளர்.

தொல்காப்பியத்திற்கும் சங்க இலங்கியங்களுள்,
பத்துப்பாட்டு
கலித்தொகை
ஆகியவற்றுக்கும்
சீவகசிந்தாமணிக்கும்
உரை வகுத்த பெருமைக்குரியவர்.

அவருடைய உரைகளை நோக்கும் பொழுது அவர், "மாக்கள்" என்ற சொல்லுக்கு "மனவுணர்ச்சியில்லாதோர்" என்ற பேராசிரியரின் கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் என்பது புலப்படுகின்றது.

அவர் உரையின் சில பகுதிகள் வருமாறு:-

"தவம் செய் மாக்கள் தம்முடம்பு இடாது அதன் பயம் எய்திய அளவை மான" - மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்முடைய தவம் செய்த உடம்பைப் போகடாதேயிருந்து அத்தவத்தாற் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப. மக்களென்னாது மாக்களென்றார். வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்.

பொருநராற்றுப்படை (91-92).

"பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்" உரை:- அறிவில்லா தோருடைய வாழ்நாளை இத்துணையென்று அளந்தறியும் பொய்யாத காட்சியை உடையார். (மாக்கள் பொழுதளந்து அறியும் பொய்யாக் காண்கையர் எனச் சொற்களை இடம் மாற்றித் தம் விருப்பத்திற்கு இணங்கப் பொருள் தந்துள்ளார்). முல்லைப்பாட்டு (55).

"மாக்கள்" என்ற சொல் ஐந்தறிவுடையார்க்கே உரியது என்பதே நச்சினார்க்கினியரின் உறுதியான கோட்பாடகத் தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
முழுவலிமாக்கள்
இரியல் மாக்கள்
மதனழி மாக்கள்
ஆகிய தொடர்களுக்கு விளக்கமளிக்கையில்,
முறையே நிரம்பிய மெய்வலியை உடைய மாக்கள்
கெடுதலை உடைய மாக்கள்
வலியழிந்த மாக்கள்
என்றே எழுதிச் செல்கின்றார்.

(நெடுநல். 32; பெரும். 432; மலைபடு 280).

மனிதர் அல்லது மாந்தர் என்று விளக்க இடமிருந்தும் அதனைத் தவிர்த்து "மாக்கள்" என்ற சொல்லையே உரையிலும் பயன்படுத்துகின்றார் மருதன் இளநாகனார்.

இடைக்காலத்து உரையாசிர்களாம் பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் கருத்தினை, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பேராசிரியர் சிலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் டாக்டர் உ.வே.சாமிநாதய்யராவார்.

பத்துப்பாட்டை, நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டு உதவிய ஐயரவர்கள் ஓர் அடிக்குறிப்பில் குறிப்பிட்டது வருமாறு:-

"ஐயறிவு - ஐம்பொறியுணர்வு; மாக்கள்
 மனனுணர்வின்றி ஐம்பொறியுணர்வையே
 உடைய விலங்கு போல்வார்;

இதனை,

"மாவும் மாக்களும் ஐயறிவினவே"

"மக்கள் தாமே ஆறறிவுயிரே"

என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களானும் உணர்க! (பட்டினப்பாலை 217ம் அடிக்குரிய உரை)

இதனால், பேராசிரியரின் பாடத்தையே ஐயர் அவர்கள் ஏற்றுக்கொண்டமை புலப்படுகின்றது. அங்ஙனமே, "மாக்கள்" என்ற சொல்லுக்குப் பேராசிரியர் கொண்ட பொருளையே தாமும் மேற்கொண்டமையும் தெரிகின்றது.

ஐயரவர்கள் தாமே உரை வகுத்துவெளியிட்ட குறுந்தொகையில் பல செய்யுட்களில் மாக்கள் என்னும் சொல் இடம்பெறுகின்றது (6, 89,145,146,203,263,265,309). இவற்றுள், 6,89,145 ஆகிய செய்யுட்களின் உரையில் ஐயரவர்கள் பழைய உரையாசிரியர்களையொட்டிய விளக்கத்தையே கூறியுள்ளார்.

இந்நூலின் 145ம் செய்யுளில் வரும், "துயில்கண் மாக்களொடு" என்ற பகுதிக்கு, "துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு" என்று உரை வகுத்து, "மாக்களென்றது இங்கே தோழியை; தன் ஆற்றாமை அறியும் வன்மையில்லாமை பற்றி இங்ஙனம் கூறினாள்",என்று விளக்கமும் அளித்துள்ளார்.

ஐயரவர்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இப்படிச் சிறப்பு விளக்கங்கள் கொடுத்தாலும், ஏனைய இடங்களில் மாக்கள் என்பதற்கு "மனிதர்" என்றே பொருள் எழுதினார். மக்கள் என்றோ மனிதர் என்றோ எழுத மனமின்றி, மாக்கள் என்றே எழுதிய நச்சினார்க்கினியரிமிடருந்து இவ்வகையில் ஐயரவர்கள் வேறுபடுகிறார்.

இதனால் அறிவதாவது,

மாக்கள் என்ற சொல் பொதுவாக மக்கள் என்ற பொருளிலேயே சான்றோரால் ஆளப்பட்டுள்ளது.

இது மக்கள் என்பதன் நீட்டல் விகாரமாகக் கொள்ளத்தக்கது.

பல நிலைகளையும் சார்ந்த மக்கள் குழுவினர் இச்சொல்லால் குறிக்கப்பட்டனர்.

தொல்காப்பியர் "மாக்கள்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இடைக்காலத்தில் ஒரு கருத்துக் குழுவினர் "மாக்களும்" என்ற சொல்லை, "புள்ளும்" என்ற சொல்லின் இடத்தில் புகுத்தினர் என்று கொள்ளலாம்.

சங்க நூல்களில் "மக்கள்" என்ற பொருளில் "மாக்கள்" என்ற வடிவம் 48 முறைகளும், மக்களைக் கொண்டது என்ற பொருளில் "மாக்கட்கு" என்ற வடிவம் இரு முறைகளும், மக்களை என்னும் விளிப்பொருள்பட "மாக்காள்" என்ற வடிவம் ஒரு முறையும் இடம் பெறுதலைக் காண்கிறோம்.

இக்கட்டுரையில் வற்புறுத்தப்பட்டவற்றை அறிஞர் உலகம் ஆய்ந்து ஏற்குமாக.

அ.தட்சிணாமூர்த்தி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆகும்  - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

பெரிது - பெரியது; மிகவும்.

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.

சான்றோர்க்கு - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

கொன்று கொல் கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

ஆகும்  - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆக்கம்  - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.
கடை - (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை.

முழுப்பொருள்
ஒருவர் ஒரு உயிரைக்  கொலைச்  செய்து அதனால் மிகப் பெரிய நன்மையும் இன்பமும், செல்வமும் பெறுவார் என்றாலும் அப்பயனை சான்றோர் பெரிதாக கருத மாட்டார் கீழ்மையாகவே கருதுவார் ஏனெனில் அது கொலை செய்து (ஒரு பாவச்செயலினால்) வந்தது. கொலை செய்வது பிறர் உயிர்களுக்கு துன்பம் செய்வது. இன்னா செய்யாமை சொன்ன திருவள்ளுவர் பிறர் உயிர்களை கொலை செய்வதை பாவமெனவே கருதுவார். 

இது குறிப்பாக துறவறத்தில் இருப்போருக்கு பொருந்தும். ஏனேனில், இல்லறத்தில் இருப்போருக்கு வேண்டுமெனில் செல்வமும் இன்பமும் தேவையான ஒன்றாக இருக்கும். இல்லறத்தோர்க்கு துறப்பது அவசியம் இல்லை. துறப்பதை ஒரு பகுதியாக கடைபிடித்து அதன் பயனை அறுவடை செய்வர். அதில் தவறில்லை. 

ஆனால் துறவறத்தில் இருப்போர் பொருட்செல்வத்தை பெரிது என கருதக்கூடாது. நிலையில்லா செல்வம் துறப்பதற்கான ஒன்று. வீடுபேறு என்னும் செல்வம்/நன்மையே அவர்களுக்கு மேலான இலக்கு. கொலை செய்தல் கீழ்மையாகும். ஆதலால் துறவறத்தில் இருந்துக்கொண்டுக் கொலை செய்தால் வீடுபேறுக் கிட்டாது. 

அதனால் தான் வேள்விகள் செய்து தேவர்களை மகிழ்வித்து செல்வம் பெறலாம். ஆனால் அது இல்லறத்தாருக்கு இன்பம் தரும். ஆனால் துறவத்தார் பிற உயிர்களை வேள்வியின் பொருட்டு செய்தாலும் அவர் வீடுபேற்றினை அடைய முடியாது. மீண்டும் பிறவியெடுத்து இப்பிறவிப் பெருங்கடலில் நீந்தவேண்டுயிருக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“....... நன்குணர்ந்தார்
என்பெறினுங் கொல்லார் இயைந்து” (சிறுபஞ்ச.47)

பரிமேலழகர் உரை
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.

மு.வரதராசனார் உரை
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

நீப்பு - துறவு; பிரிவு.

நீப்பினும் - நீத்தல் - nī-   11 v. tr. 1. To separatefrom; பிரிதல் மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் (ஐங்குறு. 22). 2. To renounce, as theworld; துறத்தல் ஒழுக்கத்து நீத்தார் பெருமை(குறள், 21). 3. To put away, reject; தள்ளுதல் (W.) 4. To put to disgrace; இழித்தல் பிள்ளையேயாயினு நீத்துரையார் (ஆசாரக். 69). 5. Todespise, loathe; வெறுத்தல் ஊரேது வல்லதேதென்றா னீத்து (திருவால. 13, 15). 6. To abandon,leave; விடுதல் உயிர்நீப்பர் (குறள், 969).--intr.To be removed; நீங்குதல் மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969).  

அற்க - வேண்டாம்

செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.
பிறிது - வேறானது; மற்றது

இன் - இனிமை; இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

நீக்கும் - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
பிற உயிர்களை (நீயோ அல்லது வேறு யாரோ உனக்காக) கொன்று அல்லது பிற உயிர்களை கொல்லக்கூடிய செயல்களை செய்து தான் உன் உயிரை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று வந்தாலும் பிற உயிர்களை கொல்லாதே. பிற உயிர்களை விட உன் உயிர் விலை உயர்ந்தது என்று இல்லை. எல்லா உயிரும் சமமே. ஆதலால் அவரவர்க்கு அவர் உயிர் இன்னுயிர். கொலை செய்தலை விட உயிர் நீத்தல் மேல். கொலை செய்யாமல் உயிர் நீத்தால் கொலை செய்யாத ஒரு பாவமும் பழியும் குறையும்.

ஆனால் உன்னை ஒருவன் கொலை செய்ய வந்தாலோ அல்லது ஒரு மாடு உன்னை முட்ட வந்தாலோ இது பொருந்தாது. இது துறவறத்தில் இருக்கும் துறவிகளுக்குத்தான் முக்கியமாக பொருந்தும். ஆனால் பொதுவாக பிற உயிர்களை கொல்லாது இருப்பது எல்லோருக்கும் பொருந்தும்.

இதே கருத்தை புலால் மறுத்தல் அதிகாரத்தில் (குறள் எண் 259) “அவி சொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று” என்று வள்ளுவரே சொல்லியிருப்பதை நினைவு கூறவேண்டும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை
தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

English Meaning - As I taught a kid - Rajesh
For an individual, is there anything more precious and vital than his own life? No. Yet, even if one were to sacrifice one’s own life or even if one has to save his own life, do not commit the act of taking another life. Every life is equally valuable. No life is lesser than other. That is why Thiruvalluvar carefully uses the word இன்னுயிர். Also, we can understand that sacrificing one's own life is better than killing another life. At least one can stay away from the sin of killing another life. 

Questions that I ask to the kid
What should we not do even if we have to save our life?
When is our own sacrifice of life better?

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
கொல்லாமை -   - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை

மேற்கொண்டு - மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

ஒழுகுவான் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வாழ்நாள்  - ஆயுட்காலம்

மேல் -  மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

செல்லாது - சொல்லாமல் - கூறாமல்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்

கூற்று -  கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்

முழுப்பொருள்
உயிர்களை கொல்லாததை ஓர் விரதமாக நினைந்து வாழ்நாள் முழுதும் மேற்கொண்டு ஒருவர் வாழ்வார் என்றால் அவர் ஆயுட்காலம் முழுவதும் ஆயுளிற்கு பிறகும் அவர் மேல் உயிரை உண்ட கொலைகாரன் என்ற கூற்று/பழி வராது. அவன் குடும்பமும் அப்பழியைச் சுமக்க நேரிடாது. உதாரணமாக பல லட்ச உயிர்களை கொன்று குவித்த ஹிட்லர் இன்றும் கொடியவராக கருதப்படுகிறார்.

மேலும் கொல்லாமையை வாழ்நாள் முழுவதும் பழகினால் அவர் அவருக்கு விதிக்கப்பட்ட முழு ஆயுளை அனுபவிக்க குறுக்கே எந்த ஒரு கூற்றும் (காலன்/யமன்) வராது. கொலை மிக பெரிய பாவம். அதனுடைய வினைப்பயனை அந்தப் பிறவியிலேயே விதிக்கப்பட்டதற்கு முன்பே அனுபவித்து இறப்பர்.

ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட நீண்ட / முழு ஆயுளை வாழ்வார் என்றால் அவர் வாழ்வில் ஞானம் எய்த ஏதுவாக இருக்கும். ஆயுள் கூடினால் அனுபவம் கூடும். மேலும் விடுபட்டு விடுபட்டு ஒவ்வொன்றாக துறந்து துறந்து ஒருவர் ஞானம் அடைகிறார். ஞானம் அடைந்தால் வீடுபேறு கிட்டும். ஆதலால் ஒருவர் கொலை செய்தால் அவர் ஞானம் அடைவதற்குத் தடையாக கூற்று(காலன்/யமன்) முன்பே வந்து அமைந்துவிடும்.

கம்பராமாயண நாட்டுப்படலத்தில், “கூற்றம் இல்லையோர் குற்றம் இலாமையால்” (79) என்று கோசல நாட்டு மக்களின் நிலையைச் சொல்லியிருப்பார். குற்றங்கள் இல்லாமையால், அந்நாட்டினருக்கு மரண பயம் இல்லையாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலியத்தின் வாக்கு. இந்திய சமயச் சிந்தனையில், பிறந்திறந்து பண்படுபவதே ஒவ்வொரு ஆத்மாவுக்கும் விதிக்கப்படுவது.

”வேள்விவாய்க் கண்படுத்தும் வெவ்வினைசெய் ஆடவர்கை
வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல்
கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் கண்படுத்தும் இன்னணமே
நாளுலப்பித் திட்டார் நமரலா தார்எல்லாம்” (சீவக 2787)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

சாலமன் பாப்பையா உரை
கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம்

குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

அஞ்சி - அஞ்சுதல் - பயப்படுதல்.

நீத்தாருள் - நீத்தார் - முனிவர்; துறவியர்.

எல்லாம் - முழுதும்

கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.

அஞ்சிக்அஞ்சுதல் - பயப்படுதல்.

கொல்லாமை -  உயிர்க்கொலைசெய்யாமை

சூழ் - ஆலோசனை; ஆராய்ச்சி; சுற்று; தலைமாலை; கடலைப்பருப்பு.

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழ்வான் - தேர்ந்தெடுத்தவன் ;

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
இங்கே மெய்யினை உணர இல்வாழ்க்கையை துறக்கும் துறவிகளை இங்கு திருவள்ளுவர் கூறவில்லை என்று எனக்கு படுகிறது. வாழ்வின் நிலையை (நிலையாமையை) கண்டு பயந்து இல்வாழ்க்கையை துறந்து துறவுவாழ்க்கையை கொண்ட துறவிகள் எல்லோரையும் விட (கருணையினால்) பிற உயிர்களை கொல்ல அஞ்சி கொல்லாமையை தேர்ந்தெடுபவர் உயர்ந்தவர் ஆவார்.

அறநெறிச்சாரப் பாடல் (61) ஒன்று, கொன்று தின்னாமையே துறவினாலாகும் பயனைக் கொடுக்கவல்லது என்னும் கருத்தில் கீழ்கண்ட பாடலைச் சொல்லுகிறது.பிற  கொள்வது

கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

சாலமன் பாப்பையா உரை
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நல்லாறு -நல்வழி, நற்பயன்; nal-l-āṟuṭaiyāṉ   n. நல்¹ + ஆறு¹ + உடையான் A man of goodmorals, one whose conduct is unimpeachable,opp. to tī-y-āṟuṭaiyāṉ; நல்வழிசெல்வோன். (W.)

எனப்படுவது - அறியப்படுவது, என்பது; என்பதின் பொருள் யாதெனின்

யாது? - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

யாது - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

ஒன்றும் -  சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing

கொல்லாமை - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை

சூழும்  - அவதரித்து, தந்திரத்தால்
சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

நெறி -  வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

முழுப்பொருள்
ஒரு உயிருக்கு தீங்கு செய்தாலோ அல்லது அதனை கொன்றாலோ அது மிக கொடியது. அவ்வாறு கொல்வது தீயவழி. ஆதலால் எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்பதனை தன் வாழ்வின் நெறியாக ஒழுக்கமாக, சுருளாக, மனநிலையாக வைத்துக்கொண்டு (வாழ்நாள் முழுவதும்) பின்பற்றி வாழும் வழி நல்வழியாகும். அதுவே அறமாகும். அது நற்பயனை அளிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

கொல்லாமை, கள்ளுண்ணாமை போன்ற பல தலைப்புகளில் வள்ளுவர் சொல்லும் நீதிகள் சமண நீதிகள் என்பதுடன் அவை முன்வைக்கப்பட்டிருக்கும் விதம், அவற்றுக்குரிய காரண காரியத்தொடர்பு முழுக்க முழுக்க சமண மதத்தின் தத்துவப்பின்புலத்தில் இருந்துவந்தது. கொல்லாமையைச் சொல்லவரும்போது
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
என்று கொல்லாமையை அனைத்துக்கும் மேலாக நிறுத்தும் தன்மையை நாம் குறளில் காண்கிறோம். உண்மையில் அனைத்து அறங்களுக்கும் மேலாக கொல்லாமையை நிறுத்துவது சமணத்துக்கே உரிய தத்துவம் ஆகும். 

பரிமேலழகர் உரை
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

ஒன்றாக நல்லது கொல்லாமை

குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
ஒன்றாக - ஒருபொருளாக;  (Certainly;surely; positively) நிச்சயமாக; ஒருமிக்க.
நல்லது  - அறம்; நன்மையானது; காண்க:நல்லபாம்பு.
கொல்லாமை  - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை
மற்று  - maṟṟu   part. 1. An expletive; ஓர்அசைநிலை. (தொல். சொல். 264.) 2. A disjunctive;வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 3. A term meaning other, another; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன்.433.)--adv. 1. Again; மறுபடியும். (W.) 2.Subsequently, afterwards; பின். 3. See மற்றப்படி.
அதன் - அவை

சார் - cārvu   n. சார்-. 1. Place, residence; இடம் (பிங்.) 2. Pial. See ஒட்டுத்திண்ணை சார்வுந் திண்ணையுங் குயிற்றி (சீவக. 108). 3. Refuge;புகலிடம். உறுவர் செல்சார்வாகி (புறநா. 205). 4.Basis; ஆதாரம் 5. Help, support; துணை கெட்டார்க்குச் சார்வாய் (குறள், 15). 6. Means; உபாயம் உயருஞ் சார்விலா வுயிர் (கம்பரா. நாட்டு 55). 7.Attachment; பற்று (சூடா.). 8. Vicinity, neigh-bourhood; அயலிடம். (W.) 9. Partiality; ஒருதலைப்பட்சம். 10. See சார்வோலை (J.)

பின்சாரப்  - பின்பு  புகலிடம்
பொய்யாமை - poyyāmai   n. id + id. 1.Being truthful; பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 2. Impartiality;நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல்(கலித். 99).
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
சான்றோர்கள் தொகுத்த அறங்களில் எல்லாம் சிறந்த அறம் என்னவென்றால் நிச்சயமாக பிற உயிர்களை கொல்லாதிருத்தல் ஆகும்.  கொல்லாமைக்கு அடுத்து மனிதன் பற்றுடன் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த அறம் என்னவென்றால் பொய் சொல்லாதிருத்தலும் நடுநிலைமை தவறாதிருத்தலும் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஏன் பொய்யாமை கொல்லாமை அதிகாரத்தில் வரவேண்டும்?
பௌத்தமும் சமணமும் இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு செல்லபட்டன. அம்மதங்கள் பரவுவதற்கு வைசியர்கள் பொருளுதவிசெய்தனர். இவ்விரு மதங்களுமே பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, திருடாமை, பாலியல் ஒழுக்கம் என்னும் ஐந்து நெறிகளையே அடிப்படைகளாக இந்தியாவெங்கும் பரப்பின. திருவள்ளுவர் சமணர் காலத்தில் வாழ்ந்ததனால் இந்த கொல்லாமை அதிகாரத்தில் பொய்யாமை வந்திருக்கலாம். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒன்றாக நல்ல துயிரோம்பல்” (அறநெறி 62)

மு.வரதராசனார் உரை
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

சாலமன் பாப்பையா உரை
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

பரிமேலழகர் உரை
ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. '('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பகுத்து - பகுத்தல் -  பங்கிடுதல், வகைப்படுத்துதல், வகுத்துத் தெளிவாய்க்கூறுதல், வெட்டுதல் , பிடுங்குதல், To remove impurities; கோதுநீக்குதல்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

பல் உயிர்  - பல உயிர்களை

ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

நூலோர் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர்.

தொகுத்தல் - திரட்டிக் கூட்டுதல், எண் கூட்டுதல், சம்பாதித்தல், சுருக்குதல்,  மதிப்பிடுதல். 
தொகுத்தவற்றுள் -  (எல்லா கற்றோரும்) தொகுத்தள் நூல்களில் 

எல்லாம்  - உள்ள எல்லா 

தலை - எல்லா அறங்களிலும் சிறந்த அறம்

முழுப்பொருள்
நாம் மட்டும் உண்டு உயிர் வாழ்ந்தால் அது சிறப்பான வாழ்வு ஆகாது. வறுமையிலும் சரி, வசதியிலும் சரி, நம்முடைய உணவை பிறருடன் பகிர்ந்து உண்ணுவதே சிறப்பாகும். அப்படி பிறருடன் பகிர்வதால் அவருடைய பசி ஆறும். ஆதலால் அவரும் உயிர் வாழவர். இதனால் நாம் மற்றோர் உயிரை பேணி காப்பாற்றுகிறோம். இதுவே நாம் மட்டும் உண்டு பசியால் பிறர் இறந்தால் அதுவும் பாவமாகும்.

ஆதலால் பிறரை உணவால் உபசரித்து உயிர் காப்பதே கற்றோர்கள் தொகுத்த அறத்திலேயே சிறந்த அறமாகும்.

பிறருடன் பகிர்வதே சிறப்பு என்று சொல்லவில்லை. இங்கே திருவள்ளுவர் பல் உயிர் ஓம்புதல் என்கிறார். அப்படி என்றார் பசியால் வாடும் உயிர்களை காப்பாற்றுவது. வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்பதே இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.

விருந்தோம்பல் அதிகாரம் இருக்கும் பொழுது, ஏன் இதை கொல்லாமை அதிகாரத்தில் கூறியுள்ளார் திருவள்ளுவர்? ஏனெனில் பசியைப் போன்ற ஒரு நோய் இவ்வுலகில் வேறு ஏதும் இல்லை. மற்ற தொற்று நோய்களால் இறந்தவர்களை விட பசியாலும் பட்டினியாலும் இறந்தவர்களே இவ்வுலகில் மிக அதிகம். இவ்வுலகில் பல நோய்களுக்கு மருந்து இருக்கிறது. பல நோய்களை தடுப்பூசிப் போட்டு அழித்துவிட்டோம். ஆனால் பசிப் போன்ற ஒரு நோய்க்கு மருந்து உணவு மட்டுமே. ஆனால் இவ்வுலக மக்கள் பசித்தோருக்கு உணவு வழுங்குகிறார்களா? இவ்வுலகம் பசித்தோருக்கு உணவு வழங்காமல் ஒருவன் பசியால் உயிர் இறந்தான் என்றால் அது ஒரு கொலைக்கு சமம் என்று அர்த்தம். அதனால் தான் அது கொல்லாமை அதிகாரத்தில் வருகிறது. பசியையை போக்குவதற்கு மக்கள் வறியார்க்கு உணவை ஈத்துவக்க வேண்டும். அதனால் தான் ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” சிறந்த அறம். 

மேலும், 
என்று நாடு அதிகாரத்தில் வள்ளுவரே கூறியிருக்கிறார். பசி என்பது கொடியது. ஆதலால் அதனை போக்குவது அந்நாட்டின் கடமை. எல்லோர் பசியையும் போக்குவது ஒரு அரசங்காத்தின் அல்லது ஒரு ராஜ்ஜியத்தின் பொறுப்பாக்கிவிட்டு மக்கள் சென்று விட முடியாது ஏனெனில் எல்லோர் பசியையும் போக்குவது அவ்வளவு எளிதானதும் அல்ல. அதனை ஒரு அரசாங்கம் செய்வது நடைமுறையில் மிக மிக சிரமம். அதனால் தான் பசி தனை போக்குவதை ஒரு சமூக அறமாக திருவள்ளுவர் கூறுகிறார். அதனால் தான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று கொல்லாமை அதிகாரத்தில் கூறுகிறார். அதனால் அதனை நாம் ஒரு விருந்தோம்பல் பண்பாகவும் கருத வேண்டும்.

ஒப்புமை
”மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளன்கெழு தொண்டி” (அகநா 10:12)

“தீதிகந், தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும்” (திரி 70)

மேலும்: அஷோக் உரை

1780லும் 1876லும் தமிழக நிலப்பகுதியில் மாபெரும் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுக்க கஞ்சித் தொட்டிகளைத் திறந்தார்கள். இந்தக் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கும்முறை இதுதான். அந்தந்த ஊரிலுள்ள வேளாள நிலப்பிரபுக்களை பிடித்து “நீங்கள் கஞ்சி தொட்டி திறக்கவேண்டும், காலையில் பத்து மணியிலிருந்து சாயங்காலம் மூன்று மணி வரைக்கும் கஞ்சிகொடுக்கவேண்டும்” என்று மகாராஜா ஏற்பாடு செய்கிறார். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அத்தனை சாதிக்கும் கஞ்சி அளிக்கப்பட்டது – கண்டிப்பாக அதில் சாதிக்கேற்ற இடவேறுபாடு இருந்தது. அந்தக்கால பார்வை அது. ஆனால் அனைவருக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டது

அந்தக்கஞ்சித்தொட்டிகளால் திருவிதாங்கூரின் மக்கள்தொகை இருமடங்கு ஆகியது என மதிலகம் ஓலைகள் காட்டுகின்றன. திருவிதாங்கூரின் இன்றைய ஊர்கள் உருவாகி வந்ததெல்லாம் அப்போதுதான். அந்தக் கஞ்சித்தொட்டி முறை மதத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் பஞ்சம் விலகியும் நீடித்தது. சுதந்திரம் கிடைத்தபின்னரும் பல இடங்களில் இருந்தது. நிலச்சீர்திருத்தங்கள் வரும் காலம்வரை. தோவாளை கஞ்சித்தொட்டியில்ன் அ.கா.பெருமாள் கஞ்சி குடித்திருக்கிறார். இன்றும் கஞ்சிமடம் போன்ற ஊர்கள் இங்கு நிறையவே உள்ளன.

நண்பர்களே, தர்மதுரைகளும் நவீனர்களுமான வெள்ளையர் ஆண்ட நிலப்பகுதிகளில் கோடிக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் செத்து அழிந்தனர். பழைமைவாதிகளும் சாதியவாதிகளுமான திருவிதாங்கூரில் ஒருவர் கூட பட்டினியால் சாகவில்லை. நவீனத்துவ அறம் வேறு. அங்கு உணவு என்பது ஒரு விலைபொருள். வணிகப்பண்டம். நிலப்பிரபுத்துவகால அறம் சாதிவேறுபாடுகள் மிக்கது. பலவகை அடிமைத்தனங்கள் கொண்டது. ஆனால் அங்கே உணவு அன்னம், தெய்வ வடிவம். பகிர்ந்துண்ணுதல் அதன் நெறி.

........
........
........

ஒரு பனையேறி ஆயிரம் மூடநம்பிக்கைகளும் சாதிப்பற்றும் கொண்டவராக இருக்கலாம், ஆனால் குடிப்பதற்கு என கேட்டால் பதநீருக்குக் காசு வாங்கமாட்டார். பிள்ளைக்குச் சமைப்பதற்கு என்று கேட்டால் மீனவர் மீனுக்குக் காசுவாங்கமாட்டார். பகிர்ந்துண்ணுதல் இயல்பான அறமாக இருந்தது. அதை அவர்கள் பண்டமென்றே பார்க்கவில்லை.

===

எழுத்தாளர் ஜெயமோகனின் ’ராமனின் நாடு’ கட்டுரையில் கீழ்க்காணும்வாரு வருகிறது

நான் “வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்” என்ற கம்பன் வரியை நினைத்துக்கொண்டேன். வறுமை இல்லாத இடத்தில் கொடையும் இருக்கமுடியாது. பகிர்தல் இருக்கும். அது கொடை அல்ல. பகிரும்போது கொடுப்பவனும் பெறுபவனும் சமமான நிலையில் இருக்கிறார்கள். பகிர்தல் இருந்தால் வறுமை இருக்காதுதான். எலமஞ்சலி லங்கா வாழ்வது வறுமையும் வள்ளல்தன்மையும் இல்லாத பழைய ஒரு காலகட்டத்தில்

முழுக்கட்டுரை

நான் கோதாவரியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒருமாதகாலம் தங்கி எழுதினேன்.

அற்புதமான சூழல். எலமஞ்சலி ஒரு அழகிய சிற்றூர். வளையோடுவேய்ந்த நீளமான வீடுகள் நிரைவகுத்த சீரான தெருக்கள் கொண்டது. வறுமையோ குப்பைக்கூளமோ இல்லாத சூழல். வீடுகளுக்கு முன்பக்கமாகவே இரு வாசல்கள். ஒன்று ஆண்களுக்கு இன்னொன்று பெண்களுக்கு.

ஊருக்கு அப்பால் பிரம்மாண்டமான தென்னந்தோப்புகள். தென்னங்காடு என்றே சொல்லவேண்டும். நடுவே ஓடும் மண்சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று கோதாவரியை அடையும். கோதாவரிக்கரையின் ஓரமாக செம்படவர்களின் ஊர்கள். மண்ணாலான சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். ஆனால் சுத்தமானவை. வாரந்தோறும் செம்மண்ணாலும் சுண்ணத்தாலும் கோலமிட்டு அவற்றை அழகுறச்செய்வார்கள்.

தென்னந்தோப்பு நடுவே இருந்தது நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. பத்தடி உயரமான சிமிண்ட் தூண்களுக்குமேல் அது நின்றது. அதன் முகப்பு ஊரைநோக்கியிருந்தாலும் ,மறுபக்கம் மிகவிரிவான ஒரு உப்பரிகை கோதாவரியை நோக்கித்திறந்திருந்தது.  அங்கிருந்து நோக்கினால் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் அகலத்திற்கு கோதாவரி விரிந்து கிடக்கும்.

கோதாவரியின் மிக அதிகமான அகலம் அங்கேதான்.  இரண்டு பெரிய நீர்வழிகளாகப்பிரிந்து கடலை அணுகியது. நடுவே பெரிய மணல்திட்டு ஒரு தீவுபோல தென்னைமரங்களும் புதர்களும் செறிந்து தெரியும். கோதாவரியின் நீரோட்டத்தில் அந்தத்தீவு கப்பல் போல மிதந்துசெல்வதாக பிரமை எழும். கோதாவரியின் நீர்ப்பாசிமணம் படிந்த காற்று அலையலையாக வீசிக்கொண்டிருக்கும்.

நானும் எனக்கு உதவியாக வந்த தனசேகரும் அங்கே குடியேறினோம். எங்களுக்குக் காவலாக ஒரு வாட்ச்மேன் மட்டும்தான். அவர்தான் அருகே ஒரு வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை தினமும் கோதாவரியில் சிறுபடகில் சென்று எடுத்துவந்து தருவார். வயதானவர். எஞ்சிய நேரம் முழுக்க கீழே சிமிண்ட் தூண்களுக்கு நடுவே போடப்பட்ட கயிற்றுக்கட்டிலில் சுருட்டுப்பிடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் அமர்ந்திருப்பார்.

நான் அந்த உப்பரிகையிலேயே நாள் முழுக்க அமர்ந்திருப்பேன். காலை எழுந்ததும் திரைக்கதையை கொஞ்சம் எழுதுவேன். பிறகு கண்ணை நிறைத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரியின் அலைகளையும், அதன் மேல் மெல்ல ஒழுகிச்செல்லும் படகுகளின் விரிந்து புடைத்த கொக்குச்சிறகு போன்ற வெண்ணிறப்பாய்களையும், அப்பால் வளைந்திறங்கும் வானத்தையும் பார்த்துக்கொண்டிருப்பேன். மறுகரை மெல்லிய பச்சைக்கோடு போல நெளிந்துகொண்டிருக்கும்.

படகுகளில் இருந்து செம்படவர்கள் வலைவிரிப்பதைப்பார்ப்பது ஓர் அபாரமான அனுபவம். படகுகள் சிறகு விரிப்பதுபோலத்தோன்றும். வலை சென்று நீரில் விழும் இடம் எப்படி கச்சிதமான வட்டமாக அமைகிறது என்று எண்ணி எண்ணி வியப்பேன். படகில் நின்றபடி செம்படவன் வலையை இழுக்கையில் அந்த விசைக்கு எப்படி படகு நகராமலிருக்கிறது?  சிலசமயம் படகு பெரும்பாலும் நீருக்குள் மூழ்கியிருக்க படகோட்டி வெறும்நீரில் துடுப்பிட்டு செல்வதுபோலத்தெரியும்

அந்தியில் வேறுவகை மீன்கள் வரும். ஆகவே சிறிய லாந்தல்விளக்குகளுடன் செம்படவர்கள் நீர்ப்பரப்பில் மீன்பிடிப்பார்கள். இருளுக்குள் அவை விண்மீன்கள் போலத்தெரியும். அலையடிக்கும் விண்மீன்கள். வானத்து விண்மீன்களுடன் அந்தச்செந்நிற விண்மீன்களும் கலந்துவிடும். அவர்களுக்கு என்றே பாடல்கள் உண்டு. நம்மூர் தெம்மாங்குபோல. பல மெட்டுக்களை பின்னாளில் தேவிஸ்ரீபிரசாத் சினிமாப்பாட்டுகளாக ஆக்கியிருக்கிறார். காற்றின் அலைவேறுபாடுகளுக்கேற்ப அந்த பாடல்கள் கிழிந்து கிழிந்து பிசிறுகளாக வந்து காதில் விழும்.

நான் அந்த மனநிலையை நீட்டிக்கச்செய்வதற்காக தெலுங்கு பாடல்களை மட்டுமே இரவில் கேட்பேன். ராமராவ் நடித்தபடங்களுக்காக கண்டசாலா பாடிய பாடல்கள் அற்புதமானவை. கண்டசாலா என்பது ஓர் ஊர், கோதாவரிக்கரையில்தான் அதுவும் இருக்கிறது.  ராமராவை நினைக்காமல் ஆந்திரத்தை பார்க்கமுடியாது. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். சிலைகளாக, சினிமாப்பாடல்களாக. இன்றைய ஆந்திரம் என்பது ராமராவின் சிருஷ்டி. தேங்கிக்கிடந்த ஆந்திரத்தை மறுபிறப்பு எடுக்கவைத்தவர் அவர்.என்றும் மக்களுடன் ஒருவராக இருந்தவர்

கூடவே தியாகய்யர் பாடல்கள்.அவையும் ராமா ராமா என்றுதான் கூவுகின்றன. ‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா” என்கிறார் தியாகராஜர். அரசனுக்கரசனாக தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்” ராமன் ஒரு கனவு. ஓர் இலட்சியம்.

எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல். பெரிய சிக்கலொன்றும் இல்லை. சிலநாட்களில் தெலுங்கு புரியத்தொடங்கியது. நான் அதிகாலையில் எழுந்து வேலைசெய்வதையும், என் செலவுக்கான பணத்தை தனசேகரே அளிப்பதையும், தனா அரைக்கால்சட்டை போட்டிருப்பதையும் கண்ட வாட்ச்மேன் அவரை என் எஜமான் என்று புரிந்துகொண்டார்.

காலையில் வந்ததும் என்னிடம் “பெத்தராயுடு எழுந்ததும் டீ கொண்டு வைத்திருப்பதைச் சொல்லிவிடுங்கள்” என்று பவ்யமாகச் சொல்வார். பெத்தராயுடு ஒன்பதரை மணிக்கு எழுந்து டீயை சாப்பிடுவார். மதிய உணவை பெத்தராயிடுவுக்கு வாட்மேனே அன்புடன் பரிமாறுவார். சமயங்களில் பெத்தராயிடுவை எழுப்பி உணவூட்டவில்லை என்பதற்காக என்னிடம் கோபித்துக்கொள்வதும் உண்டு

நாங்கள் ஒருமுறை வெளியே நடக்கச்சென்றபோது வாட்ச்மேனிடம் பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டுப் போனோம். அவர் சரி என்றார். திரும்பி வந்தால் விடுதி எல்லா வாசல்களும் திறந்து அனாதையாக கிடந்தது. அப்பகுதியில் எங்கும் மானுடநடமாட்டம் இல்லை. உள்ளே மடிக்கணினிகள் , செல்பேசிகள், பணம் ,நகை எல்லாம் இருந்தது. நல்லவேளை திருட்டுப்போகவில்லை.

ஒருமணிநேரம் கழித்து வாட்ச்மேன் வந்தார். கையில் இரவுணவு. தனா அவரை கண்டபடி திட்டினார். அவருக்கு என்ன புரிந்ததோ சிரித்தபடி தலையாட்டிக்கொண்டிருந்தார்.  மீண்டும் மறுநாள் அவரிடம் பலமாக எச்சரித்துவிட்டு நடக்கச்சென்றோம். திரும்பி வந்தபோது வீடு திறந்து கிடந்தது. அனு தனா உக்கிர ரூபம் கொண்டார். வாட்ச்மேன் தெய்வீகப்புன்னகை புரிந்தார்.

மீண்டும் அதேதான் கதை. அவர் அங்கே இருக்கையில் நாங்களே பூட்டிவிட்டும் செல்லமுடியாது. அப்படியும் ஒருமுறை சாவி வாங்கி பூட்டிவிட்டுச்சென்றோம். அவர் அதன் பின்னர் திறந்திருக்கிறார். அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். என்ன செய்வதென்றே தெரியவில்லை

அப்பகுதியில் டைகர்பிரான் எனப்படும் இறால்வளர்ப்புப் பண்ணைகள் மிகுதி. கோதாவரியின் நீரை மோட்டார் வைத்து இறைத்து வயல்களில் தேக்கி இறால் வளர்ப்பு செய்வார்கள்.  அங்கே கேட்டால் அதை ‘டிகர்’ என்பார்கள். டைகர் பிரான் என்பதன் சுருக்கம். வளர்ந்த இறால்களை வாங்கிச்செல்ல வந்த லாரியில் ஒருவர் தமிழ் பேசினார். எங்கள் தமிழ்ப்பேச்சைக்கேட்டு அவரே வந்து எங்களிடம் உரையாடினார். மாணிக்கம் என்று பெயர். திருப்பத்தூர்காரர்

அவரிடம் வாட்ச்மேனிடம் இந்தச்செய்தியைச் சொல்லிப்புரியவைக்க முடியுமா என்று கோரினோம். மதிப்புமிக்க பொருட்கள் இருக்கின்றன, கதவை மூடிவிட்டுச் செல்லும்படி நாங்கள் மன்றாடுவதாகச் சொல்லச் சொன்னோம். மாணிக்கம் சிரித்தார். “சார், இவனுகளுக்கு அதைச் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. ஏன்னா இங்க திருட்டே கெடையாது”

ஆச்சரியமாக இருந்தது. “பாத்தீங்கள்ல, ஒரு வீட்டையாவது மூடி வைக்கிறாங்களா? பலசமயம் ராத்திரிகூட கதவு தெறந்துதான்சார் கெடக்கும். இங்க திருட்டு நடக்கிறதே இல்ல. அதனால அந்த மாதிரி நெனைப்பே இவனுகளுக்கு இல்ல…. வேணுமானா சொல்றேன்”. நான் “வேண்டாம்” என்றேன். அது திருட்டை அவர்களுக்கு நாமே கற்பிப்பதுபோல.

உண்மையில் எலமஞ்சலி அப்படித்தான் இருக்கிறது என்பதை அதன்பின் கண்டேன். அங்கே குற்றம் என்பதே இல்லை. திருட்டு, அடிதடி எதுவும். இத்தனைக்கும் எல்லா மளிகைக்கடைகளிலும் சாராயம் கிடைக்கும். குடித்தால் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அவ்வளவுதான். எல்லா வீடுகளும் திறந்துதான் கிடந்தன. மீனவர்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு இரண்டுநாட்கள் மீன்பிடிக்கச்செல்வதும் உண்டு

கோதாவரியில்தான் மிகச்சிறந்த உணவை உண்டேன். மிகக்காரமான உணவு, ஆனால் அற்புதமனா சுவை. மீன்குழம்புடன் இட்லி.மீன்குழம்பின்மேல் இரண்டு இஞ்ச் கனத்துக்கு எண்ணை நிற்கும். கோதாவரியில் மீனுக்கு நெய் மிக அதிகம். பளிங்குத்தயிர். காலையுணவாக உளுந்துவடை சாப்பிட்டது அங்கேதான். வாட்ச்மேன் எப்போதுமே நிறைய உணவு கொண்டுவருவார். ஏழுஎட்டுபேருக்குத் தாங்கும். ஆந்திரர்கள் நன்றாகச்சாப்பிடுபவர்கள். நாங்கள் கொறிப்பவர்கள்.

பரிமாறி எஞ்சிய உணவை வாட்ச்மேன் சாப்பிடுவார். மிச்ச உணவை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்திருப்பார். படகுகள் செல்லும்போது ‘ஓகே ஓ!” என கூவுவார். பசியுடன் இருக்கும் செம்படவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். விலையேதும் இல்லை. நன்றிசொல்வதும் இல்லை. இயல்பாகச் சாப்பிடுவார்கள்.

ஒருநாள் நாங்கள் நடைசென்றுவிட்டு திரும்பிவந்தோம். விடுதிக்குள் இரு செம்படவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும் நட்புடன் சிரித்து “பசித்தது , ஆகவே வந்தோம். நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் பாத்திரம் தரையில் இருக்கும் என்றார் அண்ணா. தரையில் இருந்தது. ஆகவே சாப்பிடுகிறோம்” என்றார்கள். 

“நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அவர் எங்கே?” என்றென். “அவர் நாங்கள் வரும்போதே இல்லை. மகள் வீட்டுக்குப்போயிருப்பார் என நினைக்கிறோம்” சாப்பிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு துடுப்பைத்தூக்கிக்கொண்டு படகைநோக்கிச் சென்றார்கள்.

நான் “வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்” என்ற கம்பன் வரியை நினைத்துக்கொண்டேன். வறுமை இல்லாத இடத்தில் கொடையும் இருக்கமுடியாது. பகிர்தல் இருக்கும். அது கொடை அல்ல. பகிரும்போது கொடுப்பவனும் பெறுபவனும் சமமான நிலையில் இருக்கிறார்கள். பகிர்தல் இருந்தால் வறுமை இருக்காதுதான். எலமஞ்சலி லங்கா வாழ்வது வறுமையும் வள்ளல்தன்மையும் இல்லாத பழைய ஒரு காலகட்டத்தில். கம்பன் பாடிய ராமனின் நாட்டில்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘காமம், உணவு, யோகம்-3’ கட்டுரையில், இவ்வாறு வருகிறது

இந்துமதத்திற்குப் பின் உருவான சமண, பௌத்த மதங்களில் கொல்லாமை நேரடியாக உணவுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது. ஆகவே கடும் விலக்குகள் உருவாயின. அந்த கொல்லாமை நெறி இந்தியாவுக்கு சமணம் அளித்த பெருங்கொடை. பழங்குடிப் போர்களால் கொந்தளித்துக்கொண்டிருந்த இந்த தேசம் எரியணைந்து குளிர அது வழிவகுத்தது. இன்னும் பலநூற்றண்டுகளுக்கு சமண முனிவர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள்

எழுத்தாளர் ஜெயமோகனின் அருகர்களின் பாதை பயணக் கட்டுரையில் ஓசியான் பற்றிய குறிப்பில் கொல்லாமை பற்றி கீழே வருகிறது


ஓசியான் சமணர்களுக்கு முக்கியமான ஒரு தலம். ராஜஸ்தானின் ஓஸ்வால் இனக்குழுவின் பிறப்பிடம் இது என்று சொல்கிறார்கள். ஓஸ்வால்கள் இன்று துணி வணிகத்தில் ஓங்கியிருக்கிறார்கள். அவர்களின் ஓசியா மாதாஜி கோயில் இங்குள்ளது என்று குறித்து வைத்திருந்தேன்.

இந்தக் கோயில் ஒரு மலைமேல் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில். 12ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்டது. இங்குள்ள இரு கோயில்கள் சண்டி கி மாதா கோயில் மற்றும் அம்பா மாதா கோயில் ஆகியவை 1178இல் கட்டப்பட்டவை.

இந்த ஊர் பற்றிய ஒரு ஆர்வமூட்டும் தகவல் வாசித்தேன். இவ்வூருக்கு ஒரு காலகட்டத்தில் உப்கேஸ்பூர் என்று பெயர் இருந்தது. இங்குள்ள சாமுண்ட மாதாவுக்கு ஒரு காலகட்டத்தில் எருமைகளை பலிகொடுத்தார்கள். ஸ்ரீ ரத்ன பிரபா சூரி என்ற ஆச்சாரியார் அதை நிறுத்தினார். ஆகவே தேவி கோபம் கொண்டு ஆச்சாரியாரைக் கடும் நோவுக்கு ஆளாக்கினார். ஆனால் அந்த வலியைத் தாங்கிக் கொள்வதையே ஒரு பெரும் தவமாக ஆச்சாரியார் செய்தார்.

தேவி மனமிரங்கி ஆச்சாரியாரிடம் மன்னிப்புக் கோரினாள். ஆச்சாரியார் தேவிக்கு நல்லுரை சொன்னார். பக்தர்கள் கொடுக்கும் உயிர்ப்பலிகளின் பாவம் முழுக்க தேவிக்கே வரும் என்றும் விளைவாக அவளே நரகத்தில் உழலவேண்டியிருக்கும் என்றும் சொன்னார். தேவி அந்த நல்லுரை கேட்டு மனம் திருந்தி இனிமேல் பலி தேவையில்லை, சிவப்புநிறமான பூக்கள் கூடத் தேவையில்லை என்று முடிவெடுத்தாள். அதன் பின் ஆச்சாரியார் சாமுண்டிதேவிக்கு சாச்சி மாதா என்று பெயர் சூட்டினார்.

இந்த ஆச்சரியமான கதை நாட்டார் வழிபாட்டுமுறையை எப்படி சமணம் மாற்றியமைத்தது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தியா முழுக்க இந்த மாற்றத்தை சமணம் செய்திருக்கிறது. இது ஒரு பெரிய பண்பாட்டு மாற்றம். உயிர்ப்பலி இல்லாமலாவதென்பது உண்மையில் அந்த இனக்குழுவின் அடிப்படை மனநிலையையே மாற்றியமைக்கிறது. வன்முறைநீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் உள்மோதல்கள் குறைகின்றன. அந்தச்சமூகம் பிறசமூகங்களுடன் சுமுகமான உறவுகொள்ள ஆரம்பிக்கிறது. வணிகத்திலும் பிற சமூகச்செயல்பாடுகளிலும் வெற்றி அடைய ஆரம்பிக்கிறது. தமிழகத்திலும் சாதிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் இந்த அம்சத்தைக் காணலாம்.
====================
குரு நித்ய சைதன்ய யதியின் யதி:தத்துவத்தில் கனிதல் என்ற புத்தகத்தில் “ப்ரக்ஞையின் நதியில்” என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட வாரு வறுமை, பசி ஆகியவற்றைப் பற்றி வருகிறது
பகிர்தல்

எங்கள் ரயில் முக்கிய ஸ்டேஷனில் வந்து நின்ற பொழுது உண்ணுவதற்காக இரண்டு உணவு பொட்டலங்களை வாங்கினோம். குரு (நடராஜ குரு) தன் பொட்டலத்தை பிரித்து முதல் கவளத்தை கையில் எடுத்த பொழுது, ஜன்னலின் வெளியே ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய சிறுவன் கையை நீட்டி யாசித்தான். குரு அந்த சோற்றுருண்டையை அவனிடம் கொடுத்தார். அவன் அவசரமாக அதை முழுங்கிவிட்டு குரு இரண்டாவது உருண்டையை சாப்பிடுவதற்கு முன்பே மறுபடியும் கையை நீட்டினான்.

எனக்கு அது எரிச்சலூட்டியது. நான் அந்த பிள்ளையை தள்ளி விலக்கி விட நினைத்தேன். அனால் குரு நான் அப்படி செய்வதை தடுத்தார். அவர் இரண்டாவது உருண்டையை தான் சாப்பிட்டு விட்டு மூன்றாவது உருண்டையை அந்த சிறுவனுக்குக் கொடுத்தார்.
அவர் திரும்பி என்னைப் பார்த்து சொன்னார், “மனிதர்கள் பிச்சைக்காரர்களால் எரிச்சலடைவார்கள் என எனக்குத் தெரியும். வறுமை மோசமானது அனால் அது ஒரு குற்றம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் அவனால் முடிந்த அளவிற்கு வாழ முயற்சிக்கிறான். நீ இந்தியாவில் காண்பது மேலை நாடுகளில் நடக்க சாத்தியமேயில்லை. இந்த சிறுவன் நமக்கு முற்றிலும் அறிமுகமற்றவன், ஆனால் மற்றவர்களின் அன்பின் மீதும், கருணையின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். ஒரு மனிதன் மீது மற்றொரு மனிதன் வைத்திருக்கும் நம்பிக்கையே அவனை நம் முன் கைநீட்ட வைக்கிறது. உனக்கு இந்த காட்சியை கண்டு கண்களில் நீர் வரவேண்டும். இந்த பரஸ்பர பகிர்தலும் அடையாளப்படுத்துதலும் மேலை சமூகங்களில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன.”

“வறுமை ஒழிப்பதையும், உதவி தேடி நிற்கும் மனிதரின் நிலையை புரிந்து கொள்வதையும் குழப்பிக் கொள்ளாதே. முதல் பிரச்சனையை எடுத்துக் கொள்ள விரும்பினால் நீ மொத்தமாக உலக பொருளாதாரத்தை சரிப்படுத்த வேண்டியிருக்கும். உன்னால் முடிந்தால் போய் அதைச் செய். ஆனால் இரண்டாவது பிரச்சனைக்கு உடனடியான தீர்வு தேவை. அதற்காக உன் மகிழ்ச்சியை துறக்க வேண்டாம், உனக்கு இருப்பதை பகிர்ந்தால் மட்டும் போதும். உன்னுடைய மகிழ்ச்சி மற்றவருடைய மகிழ்ச்சியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.”


பரிமேலழகர் உரை
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - கிடைத்த வுணவை இயன்றவரை பசித்தவுயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துண்டு பல்வகை யுயிர்களையும் பாதுகாத்தல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை- அறநூலோர் இருவகை யறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லா வற்றுள்ளும் தலையாயதாம்.

கொல்லா வறத்தைக் கடைப்பிடித்தல் கொலையை நீக்குதல். கொலை உடல் சிதைத்துக் கொள்ளுதலும் உணவளியாமற் கொல்லுதலும் என இருவகை.இரண்டும் விளைவளவில் ஒன்றே. உண்ணாதவுயிரி இறக்குமாதலால் வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்தல் வேண்டுமென்பது தோன்ற 'ஓம்புதல்' என்றார். நூலோர் என்று பொதுப்படக் கூறியது இயல் நோக்கி அறநூலோரைக் குறித்தது, உணவளித்துக் காத்தல்போற் சிறந்த நன்மை வேறின்மையின் 'தலை' என்றார்.

மணக்குடவர் உரை
பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

பொருள்: பகுத்து உண்டு பல் உயிர் (உம்) ஓம்புதல் -(தம் உணவைப் பிற உயிர்களுக்குப்) பகுந்து கொடுத்து (த்தாம்) உண்டு பல உயிர்களையும் பேணுதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -(அற) நூலோர் (சிறந்த அறங்களென எடுத்துத்) தொகுத்துச் சொல்லியவற்று ளெல்லாம் தலையாய அறம்.

அகலம்: தலையாய அறத்தைத் தலை என்றார். தொகுத்தல் - ஒன்று சேர்த்தல். தொகுத்துச் சொல்லுதலைத் தொகுத்தல் என்றார். முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

கருத்து: பகுத்து உண்டு பல உயிரையுங் காத்தல் தலையாய அறம்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person lives well only for himself then it doesn't become a good life. If one eats well while others die due to poverty, then it is a sin. During both good times and bad times, one must share his food with others and live. By sharing good with others, others hunger is reduced and their lives are saved. Hence, scholars have mentioned that quenching others hunger by sharing food with others is kept as the noblest thing one can do.
At high level, it looks we need to share food with others. But deeper if we look, we should not admit killing of others life. Sharing food is an e.g of how to save lives from dying due to hunger

Questions that I ask to the kid
What is the considered as the top thing by the authors compiled the wisdom of life? Why?

அறவினை யாதெனின் கொல்லாமை

குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாந் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறன் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

அறவினை - நேர்மையான தொழில்

யாது - yātu   interrog. pron. யா². [T.ēdi, K. yāvudu.] What, which; எது. அருளல்லதியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254).; yātu   (interrog. pronoun) what, which?, எது?; 2. palm-tree-sap fermented, கள்; 3. memory, யாதி.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்; eṉiṉ   conj. if (it is) said so; 2. in consideration of.

கொல்லாமை -  kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை

கோறல் - கொல்லுதல்

பிற மற்றவை; ஓர்அசைச்சொல்.

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

எல்லாந் - எல்லாம் ; முழுதும்

தரும் - தருதல்

முழுப்பொருள்
பிற உயிர்களை கொல்லாமல், தீங்கு விளைவிக்காமல் வாழ்தல் என்பதே அறத்துக்கு உட்பட்ட செயலாகும். அவ்வாறு இல்லாமல் மட்டற்ற உயிர்களை கொல்வது என்பது எல்லா பாவங்களையும் நமக்கு வருவிக்கும் .

இக்குறளில் பொதுவாக உயிர்களை கொல்லுதல் பற்றி கூறி இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில், மனிதன் உண்பதற்காகவே உயிர்கள் கொல்லப்படுகின்றன. எனவே இக்குறள் மற்றும் அதிகாரம் புலான் மறுத்தல் அதிகாரத்தை ஒற்றியே அமைந்து இருக்கின்றது.

மனிதனாகிய நமக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை மற்ற உயிர்களுக்கு உண்டு. இவ்வுலகம் ஒன்றும் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டது அன்று. மற்றவர் பொருளை திருடுவது பாவம் எனக் கருதப்படுவது போல, நாம் படைக்காத, நமக்கு உரிமை சிறிதும் இல்லாத உயிர்களை கொல்வதும் பாவமான செயலே ஆகும்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது,ஐயறிவு உடையன முதல் ஓர் அறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்தும் கொல்லுதலைச் செய்யாமை,இதுமேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினும் சிறப்புடைத்தாய்க்கூறாத அறங்களையும் அகப்படுத்து நிற்றலின், இறுதிக்கண்வைக்கப்பட்டது.]

(அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.).

மணக்குடவர் உரை
நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.

மூ.வரதராசனார் உரை
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.


பொருள்: அற வினை யாது என்னின் கொல்லாமை -அற செயல் யாது என்றால் (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல் ; கோறல் பிறவினை எல்லாம் தரும் -கொல்லுதல் மறச் செயல் எல்லாவற்றையும் கொடுக்கும்.

அகலம்: கொலையையே செய்யத் துணிந்தவன் மற்றைய பாவங்களை யயல்லாம் செய்வா னாகலான். கோறல் பிறவினை யயல்லாந் தரும் என்றார். பிற வினை எல்லாம் என்பதற்குப் பாவங்கள் எல்லாவற்றின் பயன்களையும் என்று உரைப்பாரும் உளர்.


கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே உயர்ந்த அறம்.

English Meaning - As I taught a kid - Rajesh
A righteous deed (a deed of Dharma) is not killing not hurting others/other living organisms. Killing leads to everything evil i.e., it brings us all difficulties, pain, shame etc. If we kill somebody, someone in other side would take revenge and get into a killing spree. A person who takes the weapon gives the right for the other person to take weapon. Remember, like us, all organisms have the right to live in this world. 

Questions that I ask to the kid
What is a righteous deed? Why killing leads to evil?